என்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்
சென்னை: அஸாம் தவிர நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படாது என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வழிமொழிந்திருப்பது வரவேற்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நாடு முழுக்க குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. டெல்லியில் இது இரு தரப்பினரிடையேயான, கலவரமாக மாறி, பல உயிர்களை காவு வாங்கியது.
இந்த நிலையில், ராமதாஸ் இன்று அதிரடியாக சில டுவிட்டுகளை வெளியிட்டுள்ளார். அவற்றிற்கு எதிர்வினைகள் குவிந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. அப்படி என்ன சொல்லியுள்ளார்? இதோ பாருங்கள்:
10 மணி நேரம்.. தேதியே இல்லாமல் வந்த ஆர்டர்.. நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பருக்கு பின் என்ன நடந்தது?
|
பீகார் பாணி
பீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது! பீகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பீகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்!
|
மோடி, அமித் ஷா
அஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC- தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRCக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்! இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
|
அமித் ஷா வீடியோ
அதேநேரம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என்று, அமித் ஷா எப்போது சொன்னார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக அமித் ஷா பேசிய வீடியோக்களையும் நெட்டிசன்கள், ராமதாசுக்கு பதிலாக அளித்து வருகிறார்கள். அதில் அமித் ஷா என்ஆர்சி அமல்படுத்தப்படும் என கடந்த வருடம் பேசிய பேச்சு அடங்கியுள்ளது.
|
மாநில சுயாட்சி
தனி ஒரு மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் என்றால் மாநில சுயாட்சியை உங்கள் கட்சி ஆதரிக்குமா?? என்று அடுத்ததாக ஒரு நெட்டிசன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அஸாமில் மட்டும் அமல்படுத்த எப்படி அனுமதிக்கலாம் என்பது இவரது கேள்வியாக உள்ளது. இப்படியாக வரிசையாக ராமதாசுக்கு கேள்வி மழையை பொழிந்து வருகிறார்கள். அவர் என்ன பதில் சொல்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.