அதிமுக அதிரடி.. 7 தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கியது.. உருவானது அதிமுக - பாமக கூட்டணி!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாமக நடுவே கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் சென்னையில் இன்று கையெழுத்தானது. 7 லோக்சபா தொகுதிகள் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு ராஜ்யசபா தொகுதியும் பாமகவிற்கு வழங்கப்படுகிறது.
பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு பாமகவை எப்படியாவது அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக இருந்தன.
இந்த நிலையில் சென்னையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக தேர்தல் பணிக் குழுவை சேர்ந்த அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்பு
கடந்த வாரம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்ற நிலையில், இன்று ராமதாசுடன் தங்கமணி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்தனர்.
பொன்னாடை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் நேரடி சந்தித்தனர். ராமதாஸுக்கு பொன்னாடை போர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அன்புமணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஒப்பந்தம்
இதையடுத்து, அதிமுக-பாமக நடுவே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. பின்னர் நிருபர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: பாமகவிற்கு 7 லோக்சபா தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். ராஜ்யசபாவில் ஒரு சீட்டை பாமகவிற்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில், இரு கட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்படுவார்கள் என்று அறிவித்தார்.
பாமகவிற்கு 7 தொகுதிகள்
பிறகு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 7 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பிறகு அறிவிக்கப்படும். கடந்த தேர்தலில் அதிமுக தமிழகத்தில் 37 தொகுதிகளை வென்றது. இம்முறை எங்கள் கூட்டணி, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
10 அம்ச கோரிக்கை
டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை அதிமுகவிடம் முன் வைத்து, இந்த கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.