கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு... ஆர்.சி.குஹாத் குழு பரிந்துரைக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு வேண்டும் என ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழுவினர் வரம்பு மீறிய செயலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் அளிக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக் குழு நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது;
தேசிய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை கலை - அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக்கூடாது!
கொரோனா பாதிப்பு சூழலில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குஹாத் குழு, பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகும்.
ஆர்.சி.குஹாத் குழுவின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது!கொரோனா பாதிப்பால் பல மாநிலங்களிலும், சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளிலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் வாடும் நிலையில் எந்த நுழைவுத்தேர்வும் தேவையில்லை; நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்!
இதனிடையே இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019-ல் குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ படிப்புக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வேளையில், இப்போது கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வேண்டும் என்ற பரிந்துரை மாணவர்களை கவலைக்கொள்ளச் செய்துள்ளது.