நான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு
சென்னை: அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் நினைவு மணிமண்டபத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், ஜெ.குருவை தனது மூத்த பிள்ளையாகவே எண்ணியதாகவும், அவர் மறைவு தனக்கு வழங்கப்பட்ட தண்டனை என்றும் உருக்கமாக தெரிவித்தார். மேலும், குரு மறைந்துவிட்டார் என்பதை இன்னும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கூறினார். குரு உயிரோடு இருந்தபோது திமுகவினர் அவருக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்ததாகவும், தானும், ஜி.கே.மணியும் தான் அவரை பாதுகாத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.
தமக்கு ஒரு போதும் பதவி ஆசை ஏற்பட்டதில்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால் எப்போதோ தன்னால் ஆளுநர் ஆகியிருக்க முடியும் எனவும் கூறினார். மேலும், குருவின் சொந்தக்கிராமமான காடுவெட்டிக்கு தேவையான உதவிகளை அன்புமணி ராமதாஸ் முன்னின்று செய்வார் எனவும் உறுதி அளித்தார்.
மேலும், விழாவில் பேசியவர்கள் அன்புமணியை முதல்வராக்க ஜெ.குரு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், காலம் அவரை பறித்துக்கொண்டது என்றும் கண் கலங்கினர். இதனிடையே குருவின் நினைவு மணி மண்டபத்தை சுற்றிப்பார்த்த வன்னியர் சங்க இளைஞர்கள் பாமக நிறுவனர் ராமதாஸை புகழ்ந்து தள்ளினர். கடந்த 8 மாதகாலமாக ஜெ.குருவின் நினைவு மணி மண்டபம் கட்டுமான பணிகளில் ராமதாஸ் தனிக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.