அதிமுக வா.. திமுகவா.. யாருடன் கூட்டணி.. முடிவெடுக்குமா பாமக.. செப். 6ல் பொதுக்குழு கூடுகிறது!
வருகிற 6-ம் தேதி கூடுகிறது பாமக பொதுக்குழு என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: எல்லாரும் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் பாமக எதுவுமே செய்யவில்லையே என்று முணுமுணுக்கப்பட்டது.. இந்நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் பாமகவும் கோதாவில் குதித்து விட்டதால், தேர்தல் பரபரப்பு களை கட்ட தொடங்கிவிட்டது.
பாமக தலைவர் ஜிகே மணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதன்படி, வருகிற 6-ம் தேதி அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆன்லைனில் நடக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.
நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளதாகவும், பாமகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்த கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேர்தலை ஒட்டிய அதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் ராமதாஸ்
வழக்கமாக, எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, பாமக ரொம்பவே பிஸி ஆகிவிடும்.. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைப்பார் என்று தமிழகம் அறிந்த ஒன்றுதான்.. யார் நிறைய சீட் தருகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொள்வார் என்பதும் பாமகவின் கடந்த கால வரலாறு காட்டிய உதாரணங்கள்!
சட்டசபை தேர்தல்
இனி வரப்போகும் தேர்தலில் பாமக எப்படி எதிர்கொள்ளும்? காரணம் இது மிக மிக வித்தியாசமான சூழலில் நடக்கப் போகிறது. இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் நடக்கப் போகும் முதல் சட்டசபைத் தேர்தல். கொரோனாவின் தாக்கம் இப்போதைக்கு போகாது என்பதால் தேர்தல் சமயத்தில் கொரோனா கால கட்டுப்பாடுகளும் இருக்கப் போகிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் இந்த தேர்தல் வித்தியாசமானதே.
வாக்கு சதவீதம்
இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது பாமக.. அதேசமயம், வாக்கு சதவீதத்தை வலுவாக தக்க வைத்து கொண்டுள்ள இக்கட்சி தேர்தலுக்கு முன்பு தனக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ளவே விரும்பும்.. இக்கட்சியின் வாக்கு வங்கி சரியாமல் கச்சிதமாக இருக்கக் காரணம் பாமகவின் களப்பணிகள்தான்.. தொண்டர்கள் பக்காவாக வேலை பார்த்து கட்சியை ஒவ்வொரு வருடமும் பலப்படுத்தியே வருகிறார்கள்.
யாருடன் கூட்டணி?
அதனால்தான், பாமக யாருடன் கூட்டணி வைக்கிறதோ, அந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற உத்தரவாதத்தை அக்கட்சி கொடுக்க முடிகிறது. சென்ற லோக்சபா தேர்தலிலேயே திமுக பாமகவுடன் கூட்டணி வைக்க வேண்டியதுதான்.. ஆனால், என்ன ஆச்சோ தெரியவில்லை.. சரியான திட்டமிடல் இல்லையா, வேறு ஏதேனும் பேச்சுவார்த்தையின்போது சுணக்கம் ஏற்பட்டதா தெரியவில்லை... அதற்குள் அதிமுக முந்தி கொண்டு வந்து பாமகவை அள்ளி கொண்டு போய்விட்டது. ஆனால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்காமல் போய் விட்டது.
திமுக
கடந்த முறை சில பல காரணங்களால் தேவையில்லாமல் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக, இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. எனவேதான் தேமுதிகவை வம்படியாக உள்ளே கொண்டு வர முயற்சிக்கிறது. கூடவே, பாமகவுக்கு இந்த முறை வலைவிரிக்குமா? வன்னிய வாக்குகளை மொத்தமாக அள்ளி கொள்ள தாராளமான சீட்டுகளை ஒதுக்கி பாமகவை குஷிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அன்புமணி
ஆனால் முடிந்தவரை தாறுமாறாக பேசி விமர்சித்துக் கொண்டு விட்டனர் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும். எனவே நிச்சயம் இவர்களுக்குள் மீண்டும் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். பெரும்பாலும் அதிமுகவிலேயே பாமக தொடரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த ஜனவரியில், ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசும்போது, "'நாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், இன்னைக்கு அதிமுக ஆட்சியே இல்லை... நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு நாம்தான் விட்டுக் கொடுத்தோம்... அவர்கள் ஆட்சியை தொடர வேண்டும் என்றதால்தான் பாமக விட்டு தந்தது.
தலைமைகள்
ஆனால் நாங்கள் கேட்டது, கட்சியில் உழைக்கிறவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவி கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் ஒரு சீட், அரை சீட், கால் சீட் என்றுதான் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஒதுக்கினார்கள். இனி வரும் காலங்களிலாவது, ஆளும் கட்சியின் தலைமை எங்களது கருத்துகளை ஏற்று, அதைச் சரிசெய்ய வேண்டும்'' என்று ஆவேசம் கலந்த ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.
ரஜினிகாந்த்
அன்புமணியின் இந்த பேச்சுதான் அதிமுக தலைமையை அன்று கோபப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.. ஆனால், இந்த சம்பவத்துக்கு பிறகு பல சமாதானங்கள், இணக்கங்கள், சுமூகங்கள் அக்கட்சிகளுக்குள் ஏற்பட்டதையும் நாம் மறுக்க முடியாது. அதேபோல, ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக ஒரு பேச்சு எழுந்தபோது, "அவருடன் கூட்டணியா" என்ற கேள்விக்கு கடைசி வரை ராமதாஸ் எந்த மறுப்பும் தெரிவிக்காதது அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சற்று அதிர்ச்சியடைய செய்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. ஒருவேளை ரஜினி நிஜமாகவே கட்சி ஆரம்பித்தால், பாமகவின் நிலைப்பாடு உற்று நோக்க வேண்டி உள்ளது.
முதல்வர் பதவி
இதற்கெல்லாம் காரணம், அன்புமணியை முதல்வராக்குவது என்ற நீண்ட கால இலக்குடன் பாமக உள்ளது.. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், இதற்கான முயற்சியிலும், இலக்கிலும் அது மிக மிக தெளிவாகவே உள்ளது... அதனால் இந்த முறை யாருடன் பாமக கூட்டணி என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ்
மேலும், இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்.. தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நின்று குரல் கொடுப்பது எப்போதுமே டாக்டர் ஐயாதான்.. கூட்டணியில் இருந்தாலும், நல்ல நட்பு பாஜக மேலிடத்தில் இருந்தாலும், பலமுறை இந்தி மொழிக்கு எதிராக குரல் கொடுத்தது பாமக என்பதைதான் தமிழகம் அறியும்.
நடவடிக்கைகள்
இதைதவிர, இந்த கொரோனா தீவிரம் நம் மாநிலத்தில் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை சொல்லி வார்னிங் தந்தவர் டாக்டர் ராமதாஸ்தான்.. தொற்று பரவாமல், தினமும் மக்களுக்கு அட்வைஸ் தந்ததும், அரசுக்கும் பல யோசனைகளையும் சொல்லி வந்தவர் ராமதாஸ்தான்.. இதையும் மக்கள் சமீப காலமாக உணர்ந்தே வந்துள்ளனர். அந்த வகையில், பாமக மீது மதிப்பு நிறையவே உள்ளது என்பதையும் மறுக்க முடியாது!
மாறுமா?
இவை அனைத்தையும் பாமக தனக்கான வாக்காக பயன்படுத்தி கொள்ளுமா? அன்புமணியை முதல்வர் ஆக்குவார்களா? இந்த முறை யாருடன் கூட்டணி வைக்கக்கூடும் என்றெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்!