அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், கடந்த முறை 2001ல் அதிமுகவுடன் வைத்துக் கொண்ட கூட்டணி காலத்தில் வழங்கியதைவிட குறைவான சீட்கள் பாமகவுக்கு கிடைத்துள்ளன.
இதற்கு முன்பு 2001ம் ஆண்டில், அதிமுக-பாமக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது ஜெயலலிதா பாமகவுக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
ராஜ்யசபா எம்.பி
அன்புமணி தருமபுரி லோக்சபா தொகுதியில் தோற்ற நிலையில், ராஜ்யசபா எம்.பி. பதவியை வழங்க ஒப்புக்கொண்டு அதை செய்தும் காட்டியது அதிமுக. மேலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது அதிமுக அரசு. எனவே, இந்த முறை அதிக அழுத்தம் தந்து பாமக அதிக சீட் கேட்கவில்லை எனத் தெரிகிறது.
20 வருடங்கள் முன்பு
2001ல் அதிமுக கூட்டணியில் பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டு, 20 தொகுதிகளில் வென்றது. 2006ல் திமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2011ல் திமுக கூட்டணியில் பாமக 3 தொகுதிகளில் வென்றது.
பாமக கூட்டணி
2016 தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில்தான், 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக. 2019 லோக்சபா தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் பாமக தொடருகிறது. அந்த தேர்தலிலும் பாமக எதிலும் வெல்லவில்லை. அதிமுக தேனியில் வென்றது.
அன்புமணி விளக்கம்
இதுபற்றி அன்புமணி ராமதாஸ் கூறுகையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது அதிமுக அரசு. எனவே நாங்கள் எங்களுக்கான தொகுதிகளை குறைத்துப் பெற்றுள்ளோம் என்று விளக்கம் அளித்தார்.