சட்டசபை தேர்தல்: பாமகவில் பிப். 23 முதல் பிப். 26 வரை விருப்ப மனு- ரூ10,000 கட்டணம்: ஜி.கே. மணி
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 23-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. அதிமுக, திமுக, மநீம உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களையே அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் பாமகவும் விருப்ப மனு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கையில், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பிப்ரவரி 23-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். வரும் 23-ந் தேதி காலை 10 மணி முதல் பிப்.26-ந் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கொண்ட அலுவலகத்தில் பெற்று நிரப்பி உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம்.
பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ10,000, தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ5,000 அனைத்து தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ5,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.