முதல்ல ராமதாஸ் அறிக்கையை தெளிவா படிங்க ஸ்டாலின்.. பிறகு மன்னிப்பு கேளுங்க.. ஜி.கே.மணி அட்டாக்!
முக ஸ்டாலினின் அறிக்கைக்கு பாமக தலைவர் ஜிகே மணி பதிலடி தந்துள்ளார்.
Recommended Video
சென்னை: "டாக்டர் ராமதாஸ் வன்முறை தூண்டும் விதத்தில் பேசினாரா? அவர் விடுத்த அறிக்கையை விஷயம் தெரிந்த துரைமுருகன் துணையுடன் ஸ்டாலின் படிக்கட்டும்.. அதில் ஒரு வார்த்தை வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தால் கூட ஸ்டாலின் சொல்லுக்கு கட்டுப்படுகிறேன். அப்படி இல்லைன்னா, ராமதாசிடம் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்பாரா?" என்று பாமக தலைவர் ஜிகே மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
பொன்பரப்பி வன்முறை சம்பவம் குறித்து, எஸ்றா சற்குணம், முத்தரசன் ஆகியோர் கருத்துக்களைகூற, அந்த கருத்துக்களுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ராமதாசின் அறிக்கையை கண்டித்து 4 நாள் கழித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டு, வன்முறை தொடர்பாக ஒரு வேண்டுகோளையும் முன் வைத்திருந்தார். ஆனால் 4 மணி நேரத்தில் ஸ்டாலினுக்கு பதிலடி தந்து ஜிகே மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் சாராம்சம்தான் இது:
ஸ்டாலின் அறிக்கை
"ஸ்டாலினின் அறிக்கையை படித்து முடித்த பிறகு மனிதர்களை கொன்று உண்ணும் புலி, பசுத்தோலை போர்த்திக் கொண்டு ‘‘புத்தம் சரணம் கச்சாமி... தம்மம் சரணம் கச்சாமி'' போதித்த உணர்வு தான் ஏற்பட்டது. பொன்பரப்பி நிகழ்வுகள் குறித்தோ, சமூக நல்லிணக்கம் குறித்தோ பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
வேதம் ஓதுகிறது
பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதைப் போல, பொன்பரப்பியில் வன்முறையை தூண்டி விட்டவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டு, அமைதி குறித்து பேசுவதன் மூலம் தாம் ஒரு நல்ல நாடக நடிகர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார். மொத்தத்தில் ஸ்டாலினின் அறிக்கை என்பது சாத்தான் ஓதிய வேதம். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.
நகலை அனுப்புகிறேன்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இருக்கிறது. தேவைப்பட்டால் அதன் நகலை ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கிறேன். அதை துரைமுருகன் போன்ற விவரமறிந்தவர்களின் உதவியுடன் மு.க.ஸ்டாலின் படிக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு வார்த்தை வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தால் கூட ஸ்டாலின் சொல்லுக்கு கட்டுப்படுகிறேன். அவ்வாறு இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்பாரா?
சற்குணம் பேச்சு
அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் எஸ்ரா சற்குணமும், முத்தரசனும் பேசிய பேச்சுக்களையும் துரைமுருகன் போன்றவர்களின் துணையுடன் ஸ்டாலின் அவர்கள் கேட்க வேண்டும். இடஒதுக்கீடு கோரி வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சிறிய மனிதர் சற்குணம் கொச்சைப்படுத்துவதை மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துகிறாரா? ‘‘நானும் ஒரு விடுதலை சிறுத்தை. இந்தக் கிழட்டு சிறுத்தை சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது'' என்று அவர் மிரட்டியது தான் சமூக நல்லிணக்கத்தை போற்றும் செயலா?
நேரடி பதில் தேவை
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும் போது வன்னியர்களை மரம்வெட்டிகள் என்று கொச்சைப்படுத்தினார். அது சரியான செயலா? இயேசுவின் போதனைகளை பரப்புவதாகக் கூறும் மத போதகரும், பொதுவுடைமை பேச வேண்டிய இயக்கத்தின் தலைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விஷம் கக்குவதும், வன்மம் பாராட்டுவதும் சரியா? அவர்களின் இந்த செயலை ஸ்டாலின் ஆதரிக்கிறாரா, கண்டிக்கிறாரா? நேரடி பதில் தேவை. இதுகுறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? அவர் தயார் என்றால் விவாதத்திற்காக இடத்தையும், நேரத்தையும் அறிவிக்கட்டும்.
கூட்டணி தர்மமா?
கூட்டணியில் உள்ளவர்கள் ஒரு தவறு செய்தால் அதை ஆதரிப்பது அல்ல கூட்டணி தர்மம்; தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது தான் கூட்டணி தர்மம். அதை கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். நான்காம் தர பேச்சாளர்களைப் போல வக்கிரத்தையும், வன்மத்தையும் கலந்து பேசுபவர்களை சமூக நல்லிணக்கவாதிகள் என்று வக்காலத்து வாங்குவதும் திமுகவின் தலைவராகவும், திமுக கூட்டணியின் தலைவராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அழகல்ல.
மோதலை மூட்டுகிறார்
தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுதான் இன்றைய அவசரத் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமூகங்களிடையே மோதலை மூட்டும் திமுக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டால் தான் அது நடக்கும்; விரைவில் இது சாத்தியமாகும்.
அவதூறுகள்
1990-களின் பிற்பகுதியில் தென் மாவட்டங்களில் இரு சமுதாயங்களிடையே மிகப்பெரிய கலவரம் மூண்ட போது, அங்கு அமைதி, ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இரு சமூகத் தலைவர்களையும் மதுரைக்கு அழைத்துப் பேசியவர் மருத்துவர் அய்யா தான். இப்போதாவது இந்த வரலாறுகளை மு.க.ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கக் கூடாது.
கூட்டணி நீர்க்குமிழி
தேர்தல் தோல்வி பயத்தால் தான் மருத்துவர் அய்யா அவர்கள் இப்படி பேசுவதாக ஸ்டாலின் கூறுவது கண்டிக்கத்தக்கது. 38 மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் படுதோல்வி அடையப்போகும் மு.க. ஸ்டாலின், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டதைப் போலவும், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டது போலவும் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அடுத்த 22 நாட்களில் ஸ்டாலினின் கனவு கலையும்; கூட்டணி நீர்க்குமிழி உடையும். இது உறுதி.