அதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக?
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவிக்கு போட்டியிட பாமக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் வெற்றி மூலம் அதிமுக கூட்டணி உற்சாகத்தில் இருக்கிறது. இதையடுத்து இதே ஒற்றுமையுடன் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக கூட்டணி முழு வீச்சில் தயாராகி வருகிறது.
பெரியாரின் சிந்தனைகள் உள்ளவரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.. ஸ்டாலின் அதிரடி!
பாமக ஆதரவுடன் வெற்றி
விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவின் கடுமையான உழைப்பு, அதிமுகவின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்ததை அந்த கூட்டணி தலைவர்களும் நன்றாகவே அறிவார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் திமுகவின் அதீத தன்னம்பிக்கையை பாமகவின் அதிரடி வியூகங்கள் தகர்த்து அதிமுகவுக்கு வெற்றியை கொடுத்தது.
உள்ளாட்சி தேர்தல் ஆலோச்சனை
இதனைத் தொடர்ந்து தற்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அதிமுக அணி தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அக்கூட்டணியில் பாமக தாம் போட்டியிட விரும்பும் உள்ளாட்சி பதவிகளை அதிமுகவிடம் கொடுத்திருக்கிறதாம்.
சென்னை அல்லது ஆவடி
அதில் சென்னை அல்லது ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட பாமக விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 2 மாநகராட்சிகளிலுமே வன்னியர்கள் வாக்குகள் கணிசமாக இருப்பதை வைத்து பாமக இந்த விருப்பத்தை அதிமுகவிடம் தெரிவித்திருக்கிறதாம்.
சென்னையை விரும்பும் அதிமுக?
அதேநேரத்தில் தலைநகர் சென்னையில் போட்டியிட அதிமுக விரும்புகிறதாம். அதனால் ஆவடியை பாமகவுக்கு கொடுக்கலாமா என்பது குறித்தும் அதிமுக ஆலோசிக்கிறதாம்.
மேற்கு மண்டலத்தில் பாஜக
அதேபோல் கோவை அல்லது திருப்பூர் மேயர் பதவிக்கு போட்டியிட பாஜக விரும்புகிறதாம். இந்த 2-ல் எது கிடைத்தாலும் வெற்றி நிச்சயம்தான் என்கிற நம்பிக்கையோடு பாஜக இருக்கிறதாம்.
தீவிரம் காட்டும் தேமுதிக
அப்படியும் 2-ம் கிடைக்காமல் போனால் ஈரோடு மாநகராட்சியை அடுத்த இடத்தில் வைத்திருக்கிறதாம் பாஜக. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இப்படியான மூவ்களை மேற்கொண்டிருப்பதால் தேமுதிகவும் எந்த நகராட்சி, மேயர் பதவியை கூட்டணியில் கேட்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கிறதாம்.