ரயில்வேயில் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்குக...அன்புமணிராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கே பணி வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள கடைநிலை பணியிடங்களில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ள ரயில்வேயின் ஆள்தேர்வு கொள்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என சாடியுள்ளார். திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத்தில் 87% பணிகள் வட இந்தியர்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது மிகப்பெரும் சமூக அநீதி எனக் கூறியுள்ளார்.
முதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு தேர்தல் எழுதி பாஸ் ஆகட்டும்.. ஒன்னுமே தெரியல.. சீமான் சாடல்
தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய பணிகள் வட இந்தியர்களுக்கு கிடைப்பதை தடுக்க வேண்டும் என்றும், தாராள கொள்கை காரணமாகவே இது போன்ற பணி நியமனங்கள் நடப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்கள் நியமிக்கும் முறை தமிழர்களுக்கு எதிரான சமூக நீதி படுகொலை என விமர்சித்துள்ளார்.
இனியும் இது போன்ற சமூக அவலங்களை ஏற்கமுடியாது என்றும், இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மக்களுக்கு போதிய அளவில் வேலை கிடப்பதை உறுதி செய்ய ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.