டாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக
சென்னை: தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை அதிமுக அரசுக்கு பாமக சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை இடமாற்றம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி கார்த்திகேயன் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் இந்த பிரச்சனை முழுக்க முழுக்க அரசியல் அமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சனை என்றும் மாநில அரசு ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.. ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியலமைப்பு சட்டப்படி கிராம பஞ்சாயத்துகள் சமூக நலன் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வது கடமை என்று தெரிவித்த நீதிபதிகள் ஏன் மாநில அரசு கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது ஒரு முக்கியமான பிரச்சனை என்றும் தெரிவித்தனர். அரசின் கொள்கை முடிவுகள் காலதாமதம் செய்யக்கூடாது என்றும் நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே கருத்து தெரிவிப்பதாகவும் இது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்றும் இது தமிழகத்திற்கு மட்டும் பிரச்சனையல்ல ஒட்டுமொத்த பிரச்சனை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் அப்போது குறுக்கிட்ட பாமக தரப்பு வழக்கறிஞர் கே பாலு ஏற்கனவே தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கடைகளை குறைப்பதாக தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும் அதேபோல் பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும் அரசு முடிவு எடுத்து அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.