"என்னங்க இது.. இதெல்லாம் திமுகவினர் செய்ற வேலை ஆச்சே.. பாமக செஞ்சிருக்கே".. அப்படியே ஷாக் ஆன அதிமுக!
அதிமுக மீது ஊழல் புகார் சொல்லி மாமல்லபுரம் பாமக போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது
சென்னை: "இதென்ன கொஞ்சம் வித்தியாசமா இருக்கே.. வழக்கமாக திமுக செய்வதை கூட்டணியில் உள்ள பாமக செய்கிறதே" என்று பலரும் ஷாக் ஆகி வருகின்றனர். ஆமாம்.. அதிமுக மீது பாமக ஊழல் அட்டாக்கை போஸ்டர் அடித்து ஒட்டி தொடுத்துள்ளது!
இன்னும் சில மாதத்தில் தேர்தல் நடக்க போகிறது.. அதற்காக எல்லா கட்சிகளும் ஜரூராக தயாராகி வருகின்றன.. கூட்டணி பேரமும் இலைமறை காயாக நடந்து வருகிறது.
அதிமுகவை பொறுத்தவரை, பாமக உட்பட அதே கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடரும் என்று தெரிகிறது.. மேலும் பாமகவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டு, அந்த கட்சி கேட்கும் சீட்களை ஓரளவு தந்து திருப்திப்படுத்திய பின்னரே மற்ற கட்சிகளை அதிமுக கவனிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பாமகவின் வாக்கு வங்கியை வலுவாக வைத்துள்ளதே!
இப்போது விஷயம் என்னவென்றால், திடீரென அதிமுகவின் ஊழல் பற்றி பாமக பேசியுள்ளதுதான்.. மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பாமக சார்பில் அதிமுகவை விமர்சித்துக் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.
அதில் "சமீபத்தில் மாமல்லபுரத்தில், மீனவ பகுதியான மாமல்லபுரம் பேரூர் 10வது வார்டு மற்றும் ஒத்தவாடை தெருவான 11வது வார்டிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது... அந்த தார்ச்சாலை போட்டு சில நாட்களிலே தற்போது சேதமடைந்துள்ளது... இந்த தரமற்ற சாலை அமைக்க 70 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது... ஆனால் முற்றிலும் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்து, தரமான சாலைதான் என சான்றளித்த பிறகே ஒப்பந்ததாருக்கு ஒப்பந்தத்திற்கான பணத்தை வழங்கு.. "சொம்பை வைத்து குண்டானை எடுப்பது போல".. மாமல்லபுரத்தை கொள்ளையடிக்க மக்களுக்கு லஞ்சமாக நிவாரணமும், பணத்திற்காக சில அரசியல் குள்ளநரிகளும், தனது அரசியல் செல்வாக்கை காட்டி மிரட்டுவதால், சில அரசு அதிகாரிகள் துணை வருவதால் மாமல்லபுரமே உங்களுக்கு அடிமை என எண்ண வேண்டாம்" என்பது உட்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.. இறுதியில், மாமல்லபுரம் பாமக பேரூர் செயலாளர் ராஜசேகரன் என்று பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.
இதுதான் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.. வழக்கமாக திமுகதான் அதிமுக மீது புகார் சொல்லும்.. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று ஆளும் தரப்பு செயல்படுவதாக ஸ்டாலின் சொல்லி வருகிறார்.. இந்நிலையில் கூட்டணியில் உள்ள பாமகவும் ஊழலை குறை சொல்லி உள்ளது ஆச்சரியமாக உள்ளது.
இட ஒதுக்கீட்டு போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும், நானே தலைமை தாங்குவேன் என்று கட்சி கூட்டத்தில் ராமதாஸ் பேசியதே ஏன் என்று இன்னும் தெரியாத நிலையில், அடுத்தடுத்த அட்டாக்குகள் அதிமுகவுக்கு பாமக தொடுத்து வருவது கொஞ்சம் ஷாக்தான்!