அரசியல் பயணம்: 1991 - 2021 வரை சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை
கடந்த 1991 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய பாமக அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. முதல்வராக வேண்டும் என்று நினைத்த அன்புமணியின் இலட்சியம் வெறும் கனவாகவே போய்விட்டது.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது உறுதியாகி விட்டது. அதிமுக கூட்டணியில் 23 இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பாட்டாளி மக்கள் கட்சி கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
Recommended Video
அன்புமணியாகியாகிய நான்... என்று கடந்த 2015ஆம் ஆண்டு முதலே தமிழகம் முதலே வலம் வந்தார் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு மாற்று பாமகதான் என்று சொல்லி மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்று நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.
அதிமுக, திமுக உடன் கூட்டணி இல்லை என்று சொல்லி கடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது பாமக. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
இதனையடுத்து கடந்த 2019ஆம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தற்போதைய சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது பாமக.
1991 சட்டசபை, லோக்சபா தேர்தல்கள்
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாமக போட்டியிடவில்லை.1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாமக. முஸ்லிம் லீக், குடியரசுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்தன. 199 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. பண்ருட்டி சட்டசபை தொகுதியில் பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றிபெற்றார்.
பண்ருட்டி ராமச்சந்திரன்
1991ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் சட்டசபைத் தேர்தல் என்று இரண்டையும் ஒருசேரச் சந்தித்தது பாமக. சட்ட சபைக்கு 199 தொகுதிகளிலும் லோக்சபாவிற்கு 31 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ராஜீவ் படுகொலையின் அனுதாப அலையால் அதிமுக கூட்டணி 224 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்வெற்றி பெற்றது. அந்த அலைக்கு மத்தியிலும், பண்ருட்டி தொகுதி பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றிபெற்றார். ஆளுநர் உரையில் குறுக்கிட்டதன் காரணமாக சட்டசபையில் அவர் தாக்கப்பட்டபோது வட மாவட்டங்கள் போராட்டக் களமானது.
திமுக கூட்டணியும் விலகலும்
1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பாமகவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கியிருந்து திமுக. தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையால் அந்தக் கூட்டணி உடைந்தது. திவாரி காங்கிரசுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த பாமக, 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிமுக கூட்டணியில் பாமக
கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது பாமக. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. 20 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் பாமக படுதோல்வியடைந்தது. இந்த கூட்டணி உடனடியாக முடிவுக்கு வந்தது.
திமுக பாமக கூட்டணி
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது பாமக. 34 இடங்களில் போட்டியிட்ட பாமக 18 இடங்களில் வென்றது.
2011ல் சறுக்கிய பாமக
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போதே திமுக பாமக இடையே விரிசல் ஏற்பட்டது.
234 தொகுதிகளில் தனித்து போட்டி
அதிமுக, திமுக உடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது பாமக. ஆனால் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெற முடியவில்லை.
அதிமுக பாமக கூட்டணி
தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது பாமக. 23 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என்று கூறியுள்ளார் அன்புமணி.