வன்னியர் இட ஒதுக்கீடு - முதல்வர், துணைமுதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன அன்புமணி, ஜி.கே மணி
தமிழக சட்டசபையில் வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதற்கு பாமக தலைவர் ஜி.கே மணியும், அன்புமணி ராமதாசும் முதல்வரையும், துணை முதல்வரையும் நேரில் சந்தித்து
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே.மணியும், இளைஞரணி தலைவர் அன்புமணியும் முதல்வர் பழனிச்சாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் நேரில் சந்தித்து வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கடந்த ஆறு கட்டமாக கிராமநிர்வாக அலுவலர், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம். நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற ஆறு கட்டமாக மனு கொடுத்தும், போராட்டங்களும் நடத்தினர்.
ஒரே ஒரு அறிவிப்பு... டாக்டர் ராமதாஸை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக அரசின் கடைசி சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதில், வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். பின்னர், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. இதன்மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு வன்னியர் சங்கத்தினரும் பாமக நிர்வாகிகளும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் பழனிசாமியை பாமக தலைவர் ஜி.கே மணி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி கூறியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்பை ராமதாஸ் முறைப்படி அறிவிப்பார் என்றும், இடைக்கால வெற்றிக்கு தனது நன்றியை ராமதாஸ் தெரிவித்தார் எனவும் ஜி.கே மணி தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை முறைப்படி நடைபெறும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறியுள்ளார்.
10.5 சதவிகித உள் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வந்த உடன் அதனை தனது தந்தையான டாக்டர் ராமதாசுக்கு தெரிவிக்கும் போது கண் கலங்கினார் அன்புமணி. தனது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து மனைவிக்கு இனிப்பு கொத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.