பாபா தொடங்கி பல உரசல்கள்.. இன்று ரஜினி மேட்டரில் படு சைலன்ட்.. ராமதாஸ் மவுனத்தின் பின்னணி என்ன?
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு இதுவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு இதுவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
2004ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றது. அப்போது திமுகவிற்கு ஆதரவாக இருந்தவர்தான் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அந்த தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைத்து இருந்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இடையே, சில கருத்து வேறுபாடுகள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன. இந்த உரசல் அந்த தேர்தலில் அப்படியே எதிரொலித்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் நடிகர் ரஜினியை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். ரஜினியை மிக கடுமையாக ராமதாஸ் விமர்சனம் செய்தார்.
என்ன விமர்சனம்
அந்த லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளில் மட்டும், ரஜினி ரசிகர்கள் அந்த கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். பாமகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். அவர்கள் நம்மை மோசமாக நடத்துகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அதனால் பிரச்சாரம் செய்யுங்கள் என்று ரஜினி ராமதாசுக்கு எதிராக நேரடியாக அறிக்கை வெளியிட்டார் .
மோசம்
இதனால் அப்போது பாமக - ரஜினிகாந்த் இடையே கடுமையான உரசல் மூண்டது. ரஜினியை எதிர்த்து திருவண்ணாமலையில் ராமதாஸ் பேசினார். ரஜினி சேற்றில் விழுந்து கிடக்கும் உயிரினம் என்று ராமதாஸ் ஓபனாக கடுமையாக விமர்சித்து பேசினார். பாபா பிரச்சனை தொடங்கி காவிரி பிரச்சனை வரை பல பிரச்சனைகள் காரணமாக ரஜினி - ராமதாஸ் இடையே மோதல் நிலவி வந்த காலகட்டம் அது.
காவிரி பிரச்சனை
இந்த பிரச்சனை எல்லாம் வீரப்பன் உயிரோடு இருந்தபோதுதான் தொடங்கியது. கர்நாடகாவில் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, வீரப்பனை கொலை செய்ய வேண்டும் என்று கன்னடத்தில் பேசினார். இதுதான் ராமதாஸையும், பாமகவையும் முதலில் சீண்டியது. வன்னிய வீரர் ஒருவரை ரஜினி கொலை செய்ய சொல்கிறார் என்று ராமதாஸ் வெளிப்படையாக கூட்டங்களில் பேசினார்.
வீரப்பன்
இந்த வீரப்பன் விஷயம் காரணமாக ராமதாஸ் கடுமையாக கோபம் அடைந்து, ரஜினி படங்களை பாமக தொண்டர்களும், வன்னியர்களும் பார்க்கவே கூடாது என்று உறுதியாக கூறினார். அப்போதுதான் பாமக - பாபா இடையே பெரிய சண்டை வந்தது. பாபா படத்தின் போஸ்டரில் எல்லாம் ரஜினி கையில் சிகரெட்டோடு இருந்தார்.
கடுமையான எதிர்ப்பு
இதை ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். பாபா படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும், அவர் இளைஞர்களை கெடுகிறார் என்று கூறினார் . வடமாவட்டங்களில் பாபாவிற்கு எதிராக கடுமையாக பாமக போராட்டம் செய்தது. பாபா ரிலீஸ் ஆன பல இடங்களில் மோதல்கள் நடந்தன. அந்த அளவிற்கு ரஜினி, பாமக இடையே சண்டை ஏற்பட்டது.
காவிரி சண்டை
அதன்பின் காவிரி பிரச்சனையில் தமிழ் திரையுலக மக்களுடன் சேர்ந்து போராடாமல் இருந்தது. கர்நாடகாவில் சென்று மன்னிப்பு கேட்டது என்று பல விஷயங்கள் பாமக - ரஜினி இடையே சண்டை ஏற்பட காரணமாக இருந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ரஜினியை, ராமதாஸ் சீண்டாமல் தவிர்த்தார். கடந்த சில வருடங்களாக இந்த சண்டை இல்லாமல் இருந்தது.
என்ன மீண்டும்
தற்போது பெரியார் குறித்து ரஜினி சர்ச்சை கருத்து கூறியுள்ளார். ஆனால் ராமதாஸ் இது தொடர்பாக ஒரு டிவிட் கூட செய்யவில்லை. ஒரு அடையாளத்திற்காக கூட அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதிமுகவே கோபமாக பேசும் போது, பாமக மிகவும் அமைதியாக இதில் இருந்து வருகிறது. முன்னதாக, கோவா திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினியை ராமதாஸ் வாழ்த்தி சர்ப்ரைஸ் கொடுத்தார்.
ஆச்சர்யம்
ராமதாஸின் இந்த வாழ்த்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது . தற்போது பெரியார் விஷயத்திலும், ரஜினியை கண்டிக்காமல் ராமதாஸ் அமைதி காத்து வருகிறார். இதனால் ரஜினியுடன் ராமதாஸ் சமாதானமாக போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது . அதற்கும் மேலாக 2021 தேர்தலுக்காக ரஜினி - ராமதாஸ் கூட்டணி உருவாகிறதா என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் விவாதிப்பதை பார்க்க முடிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இரண்டு கட்சிகளும் இருக்கிறது.
கூட்டணி வாய்ப்பு
இந்த கூட்டணியில் எதிர்காலத்தில் ரஜினி சேர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இன்னும் 7 மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். அதனால், ரஜினியோடு இப்போதே சமாதானமாக போக பாமக நினைக்கிறது. அதற்கான அறிகுறியாகத்தான் ரஜினியை ராமதாஸ் விமர்சிக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.