தீவிரமடைந்த கொரோனா.. மண்டியிடும் அமெரிக்கா.. வல்லரசு நாட்டுக்கே இந்த நிலை.. எச்சரிக்கும் ராமதாஸ்!
சென்னை: உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் ஏற்படும் அழிவு என்பது கணக்கிலடங்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றின் கனவு நாடு அமெரிக்காவாகும். உலக நாடுகளில் எந்த நாடாவது வளர்ச்சியை லட்சியமாக்க முடிவு செய்துவிட்டால் அதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்காவாகும்.
ஆனால் தற்போது கொரோனா விவகாரத்தால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நாம் அமெரிக்காவாக இருக்கக் கூடாது என நடுங்குகிறார்கள். கடந்த மாதம் இதே நாள் வரை அமெரிக்காவின் மக்கள்தொகையில் 0.0001 சதவீதம் பேர் கூட இந்த கொரோனா வைரஸ் குறித்து பேசவில்லை. கொரோனா வைரஸ் பற்றி அவர்களுக்கு தெரியுமா என்ற கேள்வி கூட எழுந்தது.
தடுக்க வாய்ப்பு
இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து ஒட்டுமொத்த அமெரிக்காவே கொரோனாவால் அலறுகிறது. எங்கு பார்த்தாலும் கொரோனா புலம்பல்தான். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் அலட்சியம்தான். அமெரிக்க அரசு நினைத்திருந்தால் கொரோனாவை முன் கூட்டியே தடுத்திருக்கலாம். ஆனால் அந்த நாட்டின் பேராசையே தற்போது அழிவுக்கு வழி வகுத்துள்ளது.
முதன் முதலாக
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அப்போது கூட அமெரிக்காவில் கொரோனா அறிகுறி யாருக்கும் இல்லை. ஆனால் நெருக்கடியான சமயத்தில் அமெரிக்கா குறித்து கண்டுகொள்ளாமல் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வந்துவிட்டு சென்றார். அடுத்த நாள் அமெரிக்காவில் முதன்முதலாக கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டார்.
இந்தியாவை விட அதிகம்
அந்த நேரத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருந்தது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி மற்றும் 28-ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக மட்டுமே இருந்தது. இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று இந்தியாவில் 4197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 3,39,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவை காட்டிலும் 80 மடங்கு அதிகமாகும்.
ஏற்ற இறக்கங்கள்
நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 561 ஆகும். ஆனால் அமெரிக்காவில் 33,000 ஆகும். இது 66 மடங்கு அதிகமாகும். அது போல் இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 129 ஆகும். அமெரிக்காவில் 9618 பேர் ஆகும். இது இந்தியாவை விட 74 மடங்கு அதிகமாகும். இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஒரே மாதத்தில் இத்தனை ஏற்ற இறக்கங்கள் உள்ளது.
மறுத்த டிரம்ப்
பொதுவாக அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. அந்த நாடு மனித உயிர்களை காட்டிலும் பணத்திற்கே அதிக முக்கியத்துவம் தரும். அமெரிக்காவில் மார்ச் மாதம் நிலைமை கட்டுக்குள் கிடந்தது. அந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டும் என ஏராளமானோர் தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க டிரம்ப் மறுத்துவிட்டார். ஒரு சாதாரண காய்ச்சலுக்காக பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை. கொரோனா வைரஸ் எங்கள் நாட்டில் இல்லை என்றார்.
உலக நாடுகள்
ஆனால் நாள்தோறும் 100 பேர், 200 பேர் என கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்தது. இதையடுத்து மார்ச் 23 ஆம் தேதி முதல் தினமும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவுக்கு மறுத்த டிரம்ப் இன்று சமூக விலகல் குறித்து பேசியுள்ளார். தற்போது அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என புலம்புகிறார். இந்தியாவிடம் மருந்து கேட்கிறார், எதிரி நாடான ரஷ்யாவிடம் பாதுகாப்பு கருவிகளை வாங்குகிறார். சுருக்கமாக சொன்னால், உலக நாடுகளிடம் மண்டி போடுகிறது.
நாடு நலம் பெறும்
20 நாட்கள் அலட்சியமாக இருந்ததாலும் ஊரடங்கு பிறப்பித்தால் வர்த்தகம் பாதிக்கப்படும் என கருதியதாலும் அமெரிக்கா இன்று மிகப் பெரிய பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால் இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாத நிலை ஏற்படும். அதனால்தான் சொல்கிறேன். ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள். சில விஷயங்களை தியாகம் செய்யுங்கள். அடுத்த சில வாரங்களில் இந்தியா கொரோனாவை எதிர்கொள்ளும், நாடும் நலம் பெறும் என்றார்.