லோக்சபா தேர்தலில் பாமகவுக்கு தோல்விதான்... ஆனால் வாக்கு சதவீதம் அதிகரிப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாமக தோல்வியைத் தழுவியிருந்தாலும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகள் ப்ளஸ் ராஜ்யசபா சீட் என இடம்பெற்றது. பாமக வலுவாக இல்லாத திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.
பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர்கள் அதிகம் உள்ள விழுப்புரம் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் வடிவேல் ராவணனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் வீழ்த்தினார். அதேபோல் பாமக வலிமையாக இருக்கும் சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வீழ்த்தினார்.
2014 லோக்சபா தேர்தலில் தருமபுரியில் வென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இம்முறை தோல்வியைத் தழுவினார். இத்தோல்வியை ஏற்றுக் கொள்வதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பாமக தமது வாக்கு சதவீதத்தை இம்முறை அதிகரித்துள்ளது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்டது பாமக. அந்த தேர்தலில் 4.4% வாக்குகளை பெற்றது அக்கட்சி.
அமமுவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!
இத்தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு இடத்திலும் வெல்லாத போதும் 5.42% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாமகவின் வாக்கு வங்கியாக வன்னியர் சமூகத்தினர்தான் இருந்து வருகின்றனர். கடுமையான விமர்சனங்கள் பாமக மீது முன்வைக்கப்பட்ட போதும் அச்சமூகத்தினர் தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர் என்பதையே வாக்கு சதவீத அதிகரிப்பு வெளிப்படுத்துகிறது.