"அதை" மட்டும் கொடுத்திருங்க.. வந்துர்றோம்.. பளிச்சென போட்டு உடைத்த பாமக.. திக் திக்கில் திமுக.. !
துணை முதல்வர் பதவிக்கு திமுக கூட்டணியில் போட்டா போட்டி எழுகிறது
சென்னை: போகிற போக்கை பார்த்தால், அன்புமணியா? உதயநிதியா? என்ற ரீதியில்தான் போட்டி உருவாகும் போல தெரிகிறது.. அதாவது துணை முதல்வர் பதவி வேண்டும் என்று பாமக திமுகவிடம் ஸ்டிரைட்டாகவே கேட்டிருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
திமுக கூட்டணியில் பாமக இருக்கும் என்ற ஒரு பேச்சு சில தினங்களாகவே அடிபட்டு வருகிறது.. இது சம்பந்தமாக பாமக வாய் திறக்கவே இல்லை.. மறுப்பும் சொல்லவில்லை.. அதேசமயம், திமுக தரப்பும், கூட்டணி பலம் பற்றி சொல்கிறதே தவிர, பாமக திமுகவில் சேர வாய்ப்பில்லை என்று அடித்து கூறவே இல்லை.
அதனால், கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் மறைமுகமாகவே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.. அப்படி திமுக தனி பெரும்பான்மையுடன், வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், துணை முதல்வர் பதவியை, உதயநிதிக்கு வழங்கலாம் என்று அக்கட்சி மேலிடம் யோசனையில் இருக்கிறது.
ஆனால் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று பாமக தரப்பு நிர்ப்பந்திக்கிறதாம்.. திமுக மட்டுமில்லை.. யார் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி தருகிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்பதுதான் பாமகவின் தற்போதைய திட்டம்.
பாமகவின் ஒத்துழைப்பு இந்த முறை திமுகவுக்கு கட்டாயம் தேவையாகும் பட்சத்தில், இந்த நிபந்தனையை எப்படி எதிர்கொள்ளும் என்பது சந்தேகம்.. அதேசமயம், தேர்தல் முடிவுக்கு பின், துணை முதல்வர் பதவி தருவது பற்றி பரிசீலிக்கலாம்.. இப்பவே இதுக்கு பிளான் செய்து அக்ரிமென்ட் போட்டால், வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று திமுக தரப்பு கருதுகிறதாம்.
இதனை பாமக ஏற்கவில்லை போல தெரிகிறது.. எனினும், அதிமுக, அல்லது ரஜினி தரப்பிடம் தங்கள் கோரிக்கையை வைக்கவும் முடிவு செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. காரணம், இத்தனை காலமாக மாற்றம்-முன்னேற்றத்தை முன்னெடுத்து சென்றதே அன்புமணியை முதல்வர் பதவியில் உட்கார வைக்கும் முயற்சியால்தான்.. இப்போது விட்டால், அதனை எந்த காலத்திலும் நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்பதையும் அக்கட்சி நன்றாக உணர்ந்துள்ளது. எனினும் பாமக-திமுக கூட்டணி என்பது உறுதியாகாத நிலையிலே உள்ளது.
அப்படியானால், இப்போதைக்கு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது போல தெரிகிறது.. ஒருவேளை உதயநிதிக்கு இந்த பொறுப்பு வழங்கினால், கட்சிக்குள் மேலும் கொந்தளிப்புகள் அதிகமாகும்.. காரணம், இளைஞர் அணி செயலாளர் பதவிக்கே கடுமையான விமர்சனங்கள் கட்சிக்குள் எழுந்தது.. வாரிசு அரசியலுக்கு மறுபடியும் மறுபடியும் முக்கியத்துவம் தந்து கொண்டிருந்தால் சீனியர்கள் என்னதான் மரியாதை? என்ற சலசலப்புகள் நிச்சயம் எழவே செய்யும். சீனியர்களை யாரும் உதயநிதி மதிப்பதில்லை என்ற ஒரு பேச்சு உள்ள நிலையில், இது அவர்களை மேலும் எரிச்சலடைய வைக்கவே செய்யும்.
அதேபோல, உதயநிதிக்கு பதிலாக தருவதற்கு, சமுதாய வாக்குகளை குறிவைத்து, துணை முதல்வர் பதவியை ஒதுக்கினால் வாக்குகளை பெற்று தரும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.. கடந்த முறையே கொங்கு மண்டலம்தான் திமுகவை சாய்த்து விட்டது.. அதன்காரணமாகவும்,கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலத்தை உடைக்கவும், கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், சீனியர்கள் யாருக்கேனும் அந்த பதவியை தரலாமா என்றும் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
ஆக மொத்தம் அந்த ஒரு துணை முதல்வர் யாருக்கு போக போகிறது என்பதில்தான் சுவாரஸ்யமே அடங்கி இருக்கிறது!