இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே "அவங்களை" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை!
அன்புமணியின் வாசகத்தை திமுக காப்பி அடித்துவிட்டதாக கூறப்படுகிறது
சென்னை: ஏன் திமுகவுக்கு சொந்தமாகவே யோசிக்க தெரியாதா? பாமகவை அப்படியே காப்பி அடிக்கிறதே என்ற முணுமுணுப்புகள் கிளம்பி வருகின்றன.
கிராம சபை என்ற ஒரு விஷயத்தை திமுக கையில் எடுத்து வருகிறது.. இதற்கு பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.. மக்களுடன் நெருங்கி பழகி, அவர்களின் குறைகளை கேட்கும்போது, அந்த கட்சி வலுப்பெறுகிறது..
மக்கள் மனசில் நல்லெண்ணத்துடன் பதிந்து போகிறது.. இதன் மூலம் வாக்குகளும் பெருகுகின்றன. அதனால்தான் திமுக விடாமல் கிராம சபையை நடத்தி வருகிறது.. அதனால்தான், இந்த கிராமசபையை நடத்திவிடக்கூடாது என்று அதிமுக அரசும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
கமல்
உண்மையை சொல்ல போனால், இது அனைத்திற்கும் கமல்தான் காரணம்.. எங்கோ புதைந்து போயிருந்த கிராம சபை என்ற விஷயத்தை, துணிச்சலாக முன்னெடுத்தார்.. நவீன யுகத்தில், இப்படி பழைய விவகாரத்தை தூசி தட்டி எடுக்கிறீர்களே என்று கமலை அப்போது பலரும் கிண்டல் செய்தனர்..
மய்யம்
ஆனால், கமல் உறுதியாக நின்றதுடன், மாதிரி கிராம சபையை நடத்தி காட்டினார்.. குக்கிராமங்களில் உள்ள இளைய தலைமுறைக்கு கிராம சபை என்ற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது என்றால் அதற்கு கமல்தான் காரணம்.. அதே ரூட்டைதான் திமுகவும் கையில் எடுத்து வருகிறது... அப்போது திமுகவின் இந்த செயல் விமர்சிக்கப்பட்டது. கமல் பாணியை ஏன் திமுக கையில் எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.
தொகுதி
இந்த முறையும் அப்படி ஒரு விமர்சனம் திமுக மீது வைக்கப்பட்டுள்ளது.. இந்த விமர்சனத்தை முன் வைப்பவர்கள் பாமகவினர்.. தற்போது ஸ்டாலின் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.. அதில், ஒரு பகுதியாக, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பிரச்சாரத்தை தொடங்க போகிறார்.. அடுத்த 30 நாட்களில் 234 தொகுதிகளை சேர்ந்த மக்களையும் சந்திக்கவுள்ளார்.
விண்ணப்பம்
அதாவது ஒருநாளைக்கு ஒரு தொகுதி என்பது பிளான்.. அப்படி தொகுதிக்குள் ஸ்டாலின் செல்லும்போது, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை ஸ்டாலினிடம் தந்தால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே இதன் நோக்கம். இதற்காக www.stalinani.com என்றவெப்சைட் துவங்கப்பட்டுள்ளது. இந்த வெப்சைட்டில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்", "முக ஸ்டாலின் ஆகிய நான்" போன்ற வாசகங்கள் உள்ளதாம். இந்த வாசகங்கள்தான் இப்போது பிரச்சனையாகி உள்ளன.
அன்புமணி
இதே வாசகத்தை முன்வைத்துதான், 2016-ல் "அன்புமணியாகிய நான்", "உங்க ஊர்ல, உங்கள் அன்புமணி" என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தது.. அதுபோலவே, அச்சு அசல் அந்த வாசகத்தை திமுகவும் காப்பி அடித்துள்ளதாக பாமகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்... திமுகவுக்கு சொந்தமாகவே சிந்திக்க தெரியாதா? என்றும், கமல், அன்புமணி போன்றோரின் பாணியை ஏன் பின்பற்ற வேண்டும்? அவர்களுக்குதான் வியூகம் வகுக்க புது டீம் இருக்கிறதே? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனராம்..!