திமுகவில் ஐக்கியமான பாமக மாநில நிர்வாகி... அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன் இணைப்பு..!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் அணி மாநில துணைத் தலைவர் நாகராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர்கள் அவர் முன்னிலையிலேயே தங்களை திமுகவில் ஐக்கியமாக்கி கொண்டனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணையும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸின் பாதுகாவலர் சுனில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பாமக தலைமைக்கு கோபம் ஏற்படுத்தும் வகையில் இந்த இணைப்பு நிகழ்வு உள்ளதால் திமுகவுடன் அந்தக் கட்சி கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக பொருளாளர் சின்னச்சாமி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை உறுப்பினராக சேர்த்துக்கொண்டார்.
பாமக மற்றும் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஈடுபாட்டுடன் செய்யுங்கள் உரிய நேரத்தில் கவுரவிக்கப்படுவீர்கள் என்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவரை ஸ்டாலின் திமுகவில் சேர்த்துக்கொண்டது பாமக தரப்புக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.
இதனால் துரைமுருகன் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் கூட்டணி பேச்சுவார்த்தை இனி தொக்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பதை போல் எதுவும் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.