அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 இடங்கள்- அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12-ல் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
வன்னியர் உள்இடஒதுக்கீடு
சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக மிகப் பிற்ப்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்க்கீட்டில் வன்னியருக்கு 10.5%; சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த உள்இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன.
எடப்பாடியாருக்கு நன்றி
சட்டசபை தேர்தலை முன்வைத்து பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் ஜிகே மணி, ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுக- பாமக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பாமகவுக்கு 23 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வடமாவடங்களில் கணிசமான தொகுதியை பாமக எதிர்பார்க்கிறது. பாமகவின் இந்த எதிர்பார்ப்பையும் அதிமுக நிறைவேற்றுமா? அல்லது கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே பரவலான தொகுதிகளை ஒதுக்குமா? என்பது பேச்சுவார்த்தையின் முடிவில் தெரியவரும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் சற்று முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஸ் அறிவித்தார். சென்னை நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.