திமுக, அதிமுக பாணியில் பாமகவில் இனி மா.செ.க்களுக்கே அதிகாரம்- துணைப் பொதுச்செயலாளர் பதவி ரத்து!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் மாவட்ட செயலாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் திமுக, அதிமுக பாணியில் இனி மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாமகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அதற்கு அக்கட்சியின் பொதுக்குழுவும் ஒப்புதல் வழங்கி உள்ளது.
9 மாவட்ட ஊராக உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட மிக மோசமான தோல்வியையடுத்து பாமகவின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தை நடத்தினார் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இணைய வழியில் நேற்று மாலையில் நடந்த அந்த கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யார் அந்த 3 பேர்.. சூட்கேஸில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் கொலையில்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறற 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பாமக செல்வாக்கு உள்ள வடமாவட்டங்களில் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் பாமக இந்த தேர்தலில் தமது செல்வாக்கை வெளிப்படுத்த இயலாமல் தோற்றுப் போனது. இது தொடர்பாகவே பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில் அதிகம் விவாதிக்கப்பட்டது
ராமதாஸ் ஆதங்கம்
இப்பொதுக்குழுவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பற்றி பலரும் பல்வேறு காரணங்களை அடுக்கினார்கள். அந்த காரணங்களில் டாக்டர் ராமதாஸுக்கு எதுவும் திருப்தியில்லையாம். மேலும் கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசும் போது, ''வேட்பாளர் தேர்வில் இருந்து தேர்தல் பணி வரை உங்களிடம் தீவிரமான அக்கறை இல்லை; ஆளும் கட்சி தானே ஜெயிக்கப் போகிறது என்ற மனநிலையை வளர்த்து கொண்டீர்கள்'' என்றெல்லாம் ஆதங்கப்பட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
செலவு செய்ய பணம் இல்லை
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் பேசும் போது, ''ஆளும்கட்சி , எதிர்க்கட்சிக்கு இணையாக நாம் செலவு பண்ண முடியவிலை. தேர்தல் என்றாலே ஓட்டுக்கு மக்கள் பணம் எதிர்பார்க்கிறார்கள். நம்மிடம் தேர்தலில் செலவு செய்கிற அளவுக்கு வசதி படைத்த வேட்பாளர்கள் இல்லை. சமுதாய உணர்வும் மக்களிடம் குறைந்து வருகிறது '' என்று தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இனி திமுக, அதிமுக பாணியில்..
இந்த ஆலோசனைகளுக்கு பிறகுதான் திமுக-அதிமுகவை எதிர்கொள்ள அவர்கள் பாணியில் கட்சியை நடத்தலாம் என அதிரடி முடிவெடுக்கப்பட்டதாம். அதாவது மாவட்ட செயலாளர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பாமகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்கிறார் டாக்டர் ராமதாஸ். தற்போதைய பாமகவின் விதிகளின் படி, கட்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் இயங்குவர். துணைப் பொதுச்செயலாளர் பதவி தான் மாவட்டங்களில் அதிகாரமிக்கதாக இருந்தது. இதனால், மாவட்ட அளவில் கட்சியை வளர்ப்பதில் மாவட்ட செயலாளர்களுக்கு அக்கறை இருந்ததில்லை. அதிகாரம் இல்லாத போது கட்சியை வளர்ப்பதில் எதற்கு அக்கறை காட்ட வேண்டும் என அவர்கள் நினைத்தனர். அது நியாயமான நினைப்பு என்று பலராலும் சொல்லப்பட்டது. அதிகாரமிக்க அந்த துணைப் பொதுச்செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் மாவட்டங்களுக்கு சம்மந்தமில்லாதவர்களாகவும் இருந்தனர். இதனாலேயே, மா.செ.க்களுக்கு தங்கள் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இப்படிப்பட்ட காரணங்கள்தான் கட்சியை பலவீனமடைய வைக்கிறது என்று டாக்டர் ராமதாஸிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இனி மா.செ.க்களுக்கு அதிகாரம்
மேலும் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கினால் தான் அவர்கள் உண்மையாகவும் உணர்வு பூர்வமாகவும் அரசியல் செய்ய முன்வருவார்கள். திமுக, அதிமுக கட்சிகள் மாவட்டவாரியாக வலிமையாக இருப்பதற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுதான் எனவும் ராமதாசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட டாக்டர் ராமதாஸ், மாநில துணை பொதுச்செயலாளர் என்ற பதவியை ரத்து செய்துள்ளார். அதற்கு இணையாக திமுக, அதிமுக மாதிரி, மாவட்ட செயலாளர்களிடம் அதிகாரத்தை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பொதுக்குழு வழங்கியுள்ளது. விரைவில், புதிய மா.செ.க்கள் பட்டியலை ரிலீஸ் செய்ய விருக்கிறார் பாமக தலைவர் ஜிகே மணி. இதில், தற்போது மா.செ.க்களாக உள்ள எத்தனை பேருக்கு வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என கட்சியினரிடையே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
பாமக தீர்மானம் சொல்வது என்ன?
பாமக பொதுக்குழுவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம்: தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது. அதனடிப்படையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய பதவிக்கான அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் இப்போதைய நிர்வாக அமைப்பின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணைப் பொதுச்செயலாளரும், அதற்கு அடுத்த நிலையில் சில மாவட்ட செயலாளர்களும் இருக்கிறார்கள். கட்சியின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த நிர்வாக அமைப்பு முறை தடையாக இருப்பதாகவும், இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்ட யோசனையை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறது. அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் விதி எண் 10-இல் திருத்தம் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி கைவிடப்படுகிறது. இனி கட்சி ரீதியிலான மாவட்ட அமைப்பு மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு முன்பிருந்த நிலையிலேயே தொடரும். இந்த மாற்றத்தின்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். அதுவரை மாவட்ட அளவில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க இப்போதுள்ள நிர்வாகிகளை தற்காலிகமாக அதே பதவிகளில் தொடரச் செய்வது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தச் சிறப்பு பொதுக்குழு தீர்மானிக்கிறது.