தீர்ப்பால் சந்தோஷத்தில் அன்புமணி.. சங்கடத்தில் எடப்பாடி, வருத்தத்தில் பாஜக
Recommended Video
சென்னை: சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் அதற்காக வழக்கு தொடர்ந்த அன்புமணி சந்தோஷத்தில் உள்ளார். அதேநேரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சங்கடத்திலும், பாஜகவினர் வருத்தத்திலும் உள்ளனர்.
மத்திய அரசின் பாரத்மாலா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ.10000 கோடி செலவில் புதிதாக எட்டுவழி பசுமைவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது, இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை அமைந்தால் 2.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்ல முடியும் என தமிழக அரசு கூறியிருந்தது. இந்த சாலை அமைத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள், மரங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக 49 ஹெக்டர் வனப்பகுதி வழியாக சாலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ், பூவலகின் நண்பர்கள் உள்பட பலர், உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது-
சேலம் சாலை.. இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. மத்திய அரசுக்கு தோல்வி.. அன்புமணி வழக்கறிஞர் பரபரப்பு!
மத்திய அரசு பதில்
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே திட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் தற்போது நில அளவீடு பணிகள் மட்டுமே நடப்பதாகவும, வனத்துறை அமைச்சக அனுமதிக்கு பின்னரே நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
வழக்கில் தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இறுதிவாதங்களை கடந்த டிசம்பர் 14ம் தேதி கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று அளித்த தீர்ப்பில், 8 வழிச்சாலை திட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் 8 வழிச்சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றத்தை பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தர்மசங்கடம்
இந்நிலையில், இந்த வழக்கில் சேலம் எட்டு வழிச்சாலையை செயல்படுத்தலாம் என தமிழக அரசுக்கு சாதமாக தீர்ப்பு வந்தால் அன்புமணிக்கு நிச்சயம் தர்மசங்கடத்தை உருவாக்கும். இதேபோல் எட்டுவழிச்சாலை கூடாது என தீர்ப்ப வந்தாலும், அதற்காக வழக்கு போட்ட அன்புமணி, அதிமுகவுடன பிரச்சார களத்துக்கு செல்லும் போது, மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய தர்ம சங்கடம் ஏற்படும். எனவே தீர்ப்பு எப்படி வந்தாலும் நிச்சயம் அது அன்புமணிக்கு சங்கடம் தான்.
பாமக எதிர்க்கும்
அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை செயல்படுத்தக்கூடாது என தீர்ப்பு வந்துள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. பாமக வழக்கறிஞர் பாலு, நாங்கள் அதிமுக கூட்டணியிலே இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம் என்றும் அதுவே அன்புமணி ராமதாஸின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார் .
மகிழ்ச்சியில் அன்புமணி
இந்த தீர்ப்பு ஆளும் அதிமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பாதகமாக இருந்தாலும், அந்த கூட்டணியில் உள்ள பாமகவுக்கு சந்தோஷத்தையே தந்துள்ளது. தீர்ப்பால் அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சியில் உள்ளார். பார்த்தீங்களா மக்களே மக்கள் நலனுக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளோம். கூட்டணியில் யார் இருந்தாலும் நாங்கள் கேள்வி கேட்போம் என பிரச்சாரத்தில் அன்புமணி மார்தட்டி சொல்லப்போகிறார். ஆனால் கூடப்போகப்போகும் அதிமுக மற்றும் பாஜகவினருக்கு தான் நிச்சயம் என்ன சொல்வது என சங்கடத்தை தரும்.