கிசான் முறைகேடு... ரூ. 110 கோடி முறைகேடு...ரூ.32 கோடி மீட்பு.. .80 பேர் பணி நீக்கம்... ககன்தீப் சிங்
சென்னை: தமிழ்நாட்டில் கிசான் திட்டத்தில் இதுவரை ரூ. 110 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கிசான் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கிசான் திட்டத்தில் போலி கணக்குகளை உருவாக்கி இதுவரை ரூ.110 கோடி முதல் ரூ.120 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். ஏழை விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. 2 ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த நிதியுதவி பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் வங்கிக் கணக்கு சேலத்தில் முடக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் முறைகேடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று விளக்கம் அளித்து இருக்கும் தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் இதுவரை 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், தமிழகம் முழுவதும் ரூ. 110 கோடி முதல் ரூ. 120 கோடி வைர முறைகேடு நடந்துள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு வாய்ப்பூட்டு... தேர்தல் வரை நோ பேட்டி... நோ பிரஸ்மீட்..!
இந்த நிதியில் ரூ. 32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு பணமும் திரும்ப பெறப்படும். குற்றவாளிகள் தப்ப முடியாது. குற்றவாளிகள் தனி நபராக இருந்தாலும், அரசு சார்பில் இருந்தாலும் தப்ப முடியாது. உண்மையான விவசாயிகள் ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அடுத்த தவணை தொகை டிசம்பரில் செலுத்தப்பட வேண்டும். அதற்குள் போலி விவசாயிகள் நீக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.