வடக்கு தேயுது.. தெற்கிலாவது தேறுமா.. தென்னகத்தை மோடி சுற்றி வர இதுதான் காரணமா?
Recommended Video
சென்னை: வடக்கில் வாக்குகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் தெற்கில் தேறுமா என்று பார்க்கிறாரா மோடி என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 தென்னிந்திய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ததன் பின்னணி குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் இன்னும் ஓரிரு வாரங்களில் வர வாய்ப்புள்ளது. ஆனால் அறிவிப்பு வருவதற்கு முன்னரே கட்சிகள் தங்களது தேர்தல் வேலைகளை செய்யத் தொடங்கி விட்டன. பாஜக அனைத்துக் கட்சிகளுக்கு முன்னதாகவே தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. பீகாரில் கூட்டணி அமைத்ததோடு தொகுதிப் பங்கீடுகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடி தென்னிந்திய மாநிலங்களில் அதிரடியாக சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். இரு வாரங்களுக்கு முன்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்தவர் அப்போதே தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு சென்றார். அப்போதே அவரது வருகை தமிழகத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அதற்கான சமிக்ஞைகள் எதுவும் தெரியவில்லை. கூட்டணிக்கான அறிவிப்புகளும் எதுவும் வெளியாகவில்லை.
தென்னிந்தியாவில் கேம்ப்
முன்னதாக ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து தனது தென்னிந்திய சுற்றுப் பயணத்தை தொடங்கினார் மோடி. மோடியின் நெருங்கிய நண்பரான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராத பாஜகவை கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறிய சூழலில் ஆந்திராவில் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆந்திராவை பொறுத்த மட்டில் சந்திரபாபு நாயுடு, மோடியின்மீது கொண்ட அதிருப்தி காரணமாக ஆந்திராவில் தனது எதிரியான காங்கிரசோடு கை கோர்த்துள்ளது. பிரதமரின் நேற்றைய ஆந்திர வருகையின்போது ஆந்திராவிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக அவர் பேசிய இடங்களில் எல்லாம் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
குறுகிய காலத்திற்குள் 2 முறை
ஆந்திரப் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகம் வந்தவர் அரசு விழாவில் கலந்து கொண்டு சில நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பின்னர் கட்சி [பொதுக்கொட்டத்தில் கலந்து கொண்டவர் தமிழகத்தில் கலப்பட கூட்டணி அமைந்துள்ளது டிபென்ஸ் காரிடாரை பாஜக அரசுதான் தமிழகத்திற்கு கொண்டு வந்தது என்றும் ஊழலற்ற நேரமையான அரசை பாஜக கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் பேசினார். கஜாப்புயல் பாதிப்புக்கு கூட தமிழகம் வராதவர் இரண்டு வாரங்களுக்குள் இருமுறை தமிழகம் வந்துள்ளார். சென்ற முறை மதுரை பொதுக்கூட்டத்தில் பேசியவர் தங்களது சாதனைகளை மட்டுமே பட்டியலிட்டவர் நேற்றைய கூட்டத்தில் காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.
ஏன் இந்த திடீர் பயணம்
பின்னர் நேற்றைய சுற்றுப் பயணத்தின் இறுதியாக கர்நாடக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். ஹூப்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டவர் அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் அங்குள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். இவ்வாறாக ஒரே நாளில் மூன்று தென்னிந்திய மாநிலங்களில் மோடி அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் பின்னணியை விசாரித்தபோது நமக்கு தெரிய வந்தது இதுதான்.
தெற்கில் தேறுமா
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் தோல்வியை தழுவியதாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கோட்டை என்று கருதப்படும் உத்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உ.பி யில் அகிலேஷ் யாதவுக்கும், மாயாவதிக்கும் ஏற்பட்டுள்ள கூட்டணி, பிரியங்காவின் வருகை ஆகியவை பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் கலக்கமடைந்துள்ள பாஜக தலைமை தென்னிந்தியாவில் தங்களது வாக்கு வங்கியை வளர்க்க திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாகவே பிரதமர் தென்னிந்திய மாநிலங்களில் ஒரே நாளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்குகளை திரட்டினார்.
படையெடுக்கும் தலைவர்கள்
பிரதமரை அடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் நிதின் கட்கரி, பியுஸ் கோயல், பாஜக அகில இந்திய தலைவர் அமிட்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அடிக்கடி வருகை தர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கருத்துக் கணிப்புகள் ஒருபுறம் பாஜகவின் சரிவை கட்டியம் கூற மாட்டரசியலும், ராமர் கோயில் விவகாரமும் தங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் திரும்பியுள்ள நிலையில் பாஜகவின் கவனம் தென்னிந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.