என்னை எல்லோரும் கடைசியில் இப்படி கைவிட்டுட்டீங்களே.. கண்ணீரில் "போயஸ் கார்டன்"!
யாரும் கண்டுகொள்ளாமல் போயஸ் கார்டன் இன்று கண்ணீர் வடிக்கிறது.
சென்னை: ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் தேர்தல் தொடர்பான அனைத்து சந்திப்புகளும் போயஸ் தோட்டத்து இல்லத்தில்தான் நடந்து வந்தன. ஆனால் முதல் முறையாக அதிமுக தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து போய் கூட்டணித் தலைவர்களை சந்தித்து பேசி கொண்டிருக்கின்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எந்தத் தலைவராக இருந்தாலும் சரி அவரைத்தான் தேடிப் போய்ப் பார்க்க வேண்டும். அது மோடியாக இருந்தாலும் சரி, அத்வானியாக இருந்தாலும் சரி, விஜயகாந்த்தாக இருந்தாலும் சரி போயஸ் கார்டன் போயே ஆக வேண்டும்.
அதிலும் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள், உடன்பாடுகளில் கையெழுத்திடுவது எல்லாமே போயஸ் கார்டன் இல்லத்தில்தான். எப்போதாவது அரிதாக அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நடக்கும்.
போயஸ் கார்டன்
இந்த லோக்சபா தேர்தலில் நிலைமை மாறியுள்ளது. இதுவரை பிசியாக இருந்து வந்த போயஸ் கார்டன் ஈ காக்கா இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது யாரையுமே அந்தப் பக்கம் காணோம். ஒரு காலத்தில் ஓஹோவென திகழ்ந்த போயஸ் இல்லம் இன்று கைவிடப்பட்டது.
ஓடி வந்த தலைவர்கள்
மாறாக அதிமுக தலைவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒவ்வொரு ஏரியாவாக தேடித் தேடி போய்ப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பாஜக தலைவர் பியூஷ் கோயல் வந்தபோது அவரை சந்திக்க தொழிலதிபர் ஒருவர் வீட்டுக்கு அதிமுக தலைவர்கள் ஓடினர்.
தேமுதிக தரப்பு
இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்திக்க ஸ்டார் ஹோட்டலுக்கே முதல்வரும், துணை முதல்வரும், தலைவர்களும் வர வேண்டியதாயிற்று. அடுத்து தேமுதிக தரப்பையும் கூட அதிமுக தரப்புதான் தேடிப் போய்ப் பார்க்கிறதாம்.
வினோதம்
ஆக, ஜெயலலிதா இருந்தவரை அத்தனை பேரும் அதிமுகவைத் தேடி வந்தனர். ஓடி வந்தனர். ஆனால் இன்று அதிமுக ஓடிப் போய்ப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வினோதம்தான்.