வலுக்கும் போராட்டம்.. நீதிமன்றத்துக்கு சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் அதிரடி கைது
மதுரை: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ், மதுரையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7-ஆவது நாளான இன்று போராட்டம் மிகவும் சூடுபிடித்து வருகிறது. ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் இணைந்து தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கரூர், தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிர்வாகி கைது
இதற்கிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிரான வழக்கு இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. அதன் விசாரணையில் பங்கேற்பதற்காக சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை. இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications