பில்லிசூனியம் எடுப்பதாக கூறி மோசடி.. ரூ 2 லட்சத்தை அபேஸ் செய்த 4 பேர் கைது.. போலி சாமியாருக்கு வலை
சென்னை: பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி டிரைவரிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (45). இவருக்கு சொந்தமாக மினிவேன் உள்ளது.
இந்த நிலையில் சாமியார் ஒருவர், ராஜகுமாரனுக்கு யாரோ பில்லிசூனியம் வைத்துவிட்டதாகவும் அதை எடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என்றும் பயம் காட்டியுள்ளார்.
பீகார்: பிரசாரத்தின் போதே வேட்பாளர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை- கொலையாளியை அடித்தே கொன்ற ஆதரவாளர்கள்
உறவினர்
பில்லி சூனியத்தை எடுக்க ரூ 2 லட்சம் பணமும் 2 கோழிகளுடனும் சென்னைக்கு வருமாறு அந்த சாமியார், ராஜகுமாரனிடம் கூறினார். இதை நம்பிய அவர் தனக்கென இருந்த வேனை விற்று அதில் கிடைத்த பணத்தில் ரூ 2 லட்சத்துடன் தனது உறவினர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.
நீண்ட நேரம்
ஸ்டான்லி மருத்துவமனை அருகே அவர்களை வருமாறு அழைத்த அந்த சாமியார் ரூ 2 லட்சத்தையும் கோழிகளையும் வாங்கிக் கொண்டு பூஜை பொருட்களை வாங்கி வருவதாக கூறிவிட்டு இருவரையும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் சாமியார் திரும்பாததால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
திருவள்ளூர்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரன் வண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட கேமராவை வைத்து அந்த சாமியாரின் போன் எண்ணையும் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் மகிழம்பூ தெருவைச் சேர்ந்த யுவராஜ் (45) என்பது தெரியவந்தது.
அரக்கோணம்
இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த இடத்திற்கு சென்று அவரது மனைவியையும் மகனையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் யுவராஜின் கூட்டாளிகள் அரக்கோணத்தை சேர்ந்த சுரேஷ் (34), சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த பாப்பா (56), மதுரை மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த அமர்நாத் (21), கொடுங்கையூரை சேர்ந்த ஜெயந்தி (29) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஏமாற்றி பணம் பறிப்பு
விசாரணையில் யுவராஜ், மற்றும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து சென்னை, ஆந்திரா, கோவை, மதுரை ஆகிய ஊர்களுக்கு சென்று அங்கு தனியாக இருப்பவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் கஷ்டம் என சொன்னால் உடனே பில்லிசூனியம் என கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்களை செய்து வந்தது தெரியவந்தது.
சாமியாருக்கு வலை
இதையடுத்து 4 பேரிடம் இருந்து ராஜகுமாரன் கொடுத்த ரூ 2 லட்சம் மற்றும் 2 கோழிகளை பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள போலி சாமியார் யுவராஜை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். ராஜகுமாரனையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.