முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் திடீர் கைது.. என்ன காரணம்? பரபர தகவல்
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார்கள் கிளம்பின.
இப்படி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவர் ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி
இந்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்களான முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் என மொத்தம் 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முதலில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறைவான அவர், முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரை பிடிக்கத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
ஜாமீன்
முன் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் ஜன.6ஆம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜன. 5இல் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து சமீபத்தில் தான் விடுவிக்கப்பட்டார்
புகார் அளித்தவர் கைது
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில், ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை இப்போது போலீசார் வேறு ஒரு புகாரில் கைது செய்துள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகத் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி அருகே வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
என்ன காரணம்
சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜய நல்லதம்பியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். உறவினருக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தன்னிடம் 30 லட்ச ரூபாய் வாங்கியதாகவும் இருப்பினும், ஆவின் நிறுவனத்தில் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் விஜய நல்லதம்பி ஏமாற்றி வந்ததாக ரவீந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
போலீஸ் திட்டம்
அவரை விருதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். விஜய நல்லதம்பியிடம் நடத்தப்படும் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.