கஜா புயல் எதிரொலி.. மெரீனாவுக்கு வரும் மக்களை வெளியேற்றுகிறது போலீஸ்
Recommended Video
சென்னை: கஜா புயல் காரணமாக காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்படுமா என்று தெரியவில்லை. அதேசமயம், எந்தவிதமான சூழ்நிலையையும் சந்திக்கும் அளவுக்கு ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், தொடர்ந்து மழை கண்காணிப்பு மையத்திலிருந்து செயல்பட்டு வருகிறார்.
சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மெரீனா கடற்கரைக்கு காற்று வாங்க வந்த மக்களை சீக்கிரம் வீடுகளுக்குப் போகுமாறு போலீஸார் அறிவுறுத்தி அனுப்புகின்றனர். மழை வந்தால் அவர்கள் மாட்டிக் கொள்ள நேரிடும் என்ற அக்கறையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Constant announcements made by #Nagapattinam district administration asking people living in low lying areas to move to safer locations as #CycloneGaja is expected to make a landfall in a few hours from now #GajaCyclone #GAJA #GajaCycloneUpdate pic.twitter.com/aizcnooZUf
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) November 15, 2018
மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சென்னை கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை. அதேபோல கடலூர் சில்வர் பீச்சுக்கு மக்கள் செல்லவும் போலீஸார் தடை விதித்துள்ளனர். ஒலிபெருக்கி மூலம் கடற்கரைக்கு வந்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
புதுச்சேரி, காரைக்காலில் கன மழை:
இதற்கிடையே, கஜா புயல் நாகை அருகே கரையைக் கடக்கும்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து இங்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.