சாரட் வண்டியில் ஆரவாரமாக வந்த பாஜக தலைவர் முருகன்.. பாய்ந்தது போலீஸ் வழக்கு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளின்போது போது, குதிரை வண்டியில் ஆரவாரமாக வந்து விழா நடத்திய பாஜக தலைவர் முருகன் மீது காவல்துறையில் வழக்கு பாய்ந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நாடு முழுக்க பாஜக ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக தி.நகரில் உள்ள பாஜக தலைமையகம் கமலாலயத்துக்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தமிழக பாஜக தலைவர் முருகன் வருகை தந்தார்.
பாஜக செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் திரளான பாஜக தொண்டர்கள் குழுமி இருந்து, வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி மாம்பலம் காவல்துறையினர், முருகன், கரு. நாகராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை- பாஜக தலைவர் எல். முருகன்
சாரட் வண்டியில் பவனி வருவதற்கு காவல்துறையிடம் முன்கூட்டியே முருகன் அனுமதி பெறவில்லை என்று போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.