செம்மரக்கட்டைகளுடன் சீறி பாய்ந்த கார்.. 80 படங்களை போல் விரட்டி பிடித்த போலீஸ்!
சென்னை: செம்மரக்கட்டைகளை கடத்திக் கொண்டு தப்பி சென்ற கார் ஒன்றை போலீஸார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஆந்திரத்திலிருந்து இருந்து சென்னைக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அவர்களை சோதனை சாவடியில் போலீஸார் மடக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார்.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற காரை போலீஸார் துரத்தி சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரம் வரை விரட்டினர். எனினும் சாலையில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் அந்த காரை சோதனை செய்தனர். இதில் ரூ 20 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரையும் செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீஸார் தப்பி ஓட முயன்ற ஓட்டுநர் சாமுவேலை கைது செய்தனர்.