சார், 800 ரூபாய்.. வாங்கி 2 நாள் கூட ஆகலை.. அதிர வைத்த ராஜேஷ் குப்தா.. களமிறங்கிய போலீஸ்!
செருப்பு காணவில்லை என்று ஒருவர் போலீசில் புகாரளித்துள்ளார்.
சென்னை: என்னங்க சொல்றீங்க? ராஜேஷ்குப்தா செருப்பை காணோமா?!!
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குப்தா. பாரீஸ் கார்னரில் டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருக்கிறார்.
இவர் பக்கத்தில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்துக்கு ரத்த மாதிரி கொடுக்க போனார். லேப்-க்குள் நுழையும்போது செருப்பை விட்டுவிட்டு போனாராம். திரும்பி வந்து பார்க்கும்போது தனது செருப்பை காணவில்லை என்கிறார்.
தண்டையார்பேட்டை
ஒரு சின்ன பொருள் திருடு போனால்கூட அதற்கெல்லாம் ஸ்டேஷன் பக்கம் போய் யாருமே புகார் அளிக்க மாட்டார்கள். ஆனால் குப்தாவோ, போயும் போயும் செருப்புதானே காணாமல் போனது என்று நினைக்காமல் நேராக தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்.
800 ரூபாய் சார்
அங்கிருந்த போலீசாரிடம் இது சம்பந்தமாக ஒரு புகார் தந்தார். புகார் தந்ததுடன், தன் செருப்பு எப்படி காணாமல் போனது என்பது குறித்து விளக்கமும் அளித்தார். அப்போது, "சார்.. 800 ரூபாய் சார்.. வாங்கி 2 நாள்கூட ஆகல.. அதுக்குள்ள எவனோ சுட்டுட்டு போயிட்டான். எப்படியாவது கண்டுபிடிச்சி தந்துடுங்க சார்" என்றார்.
கேமராவில் ஆய்வு
தண்டையார் பேட்டை போலீசாரும், அவரது புகாரை வாங்கி விசாரணை நடத்தி செருப்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அத்துடன் செருப்பு மாயமான இடத்தில் உள்ள கடைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தும் வருகிறார்கள்.
காணாமல் போன செருப்பு
காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு செருப்பு விளம்பரத்தில் காணாமல் போன செருப்பு குறித்து பலர் போலீஸில் புகார் தருவது போல காட்சி வரும். அது தற்போது நிஜமாகவே நடந்திருப்பதை போலீஸாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.