"அவர்" மீது கடுங்கோபத்தில் அதிமுகவினர்... சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிசீலனை.. ஆக்ஷன் பாயுமா?
சென்னை: தேசியக்கட்சி, மாநிலக் கட்சி என பல கட்சிகளில் இருந்து தாவி தாவி வந்த ஒருவர் அண்மைக்காலமாக அரசை தொடர்ந்து சீண்டி பேசி வருவதால் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.
தமிழகத்தில் உள்ள இரு பெரும் பிரதான கட்சிகளில் ஒன்றில் மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒருவர் அந்தக் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து விலகி தேசியக் கட்சியில் ஐக்கியமானார். ஆரம்பத்தில் எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் அங்கும் அவருக்கு சிக்கல் உருவாகியது.
எதிர்பார்த்த பதவிகள், பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டு வந்தார். பழைய தலைமை மாறி புதிய தலைமை வந்த பின்னர் கட்சியில் தனது கிராஃப் உயரும் என எதிர்பார்த்த அவருக்கு மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. புதிய தலைவரும், இந்த பழைய முகத்தை கண்டுக்கவில்லை. ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
ஆனால் இந்த கோபத்தை அவரால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வரும் சூழலில் திடீரென தனது டிராக்கை அரசை நோக்கியும், ஆட்சியாளர்களையும் நோக்கியும் மாற்றினார்.
ஆட்சியாளர்களை சீண்டி பார்க்கும் வகையில் கருத்துப் பதிவிட்டு வருகிறார். பகிரங்கமாகவே கிண்டலடிக்கிறார், விமர்சிக்கிறார், திட்டக் கூட செய்கிறார். இதனால் ஆட்சியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தோழமைக் கட்சியைச் சேர்ந்தவராச்சே என்று பார்த்தால் விடாமல் பேசுகிறாரே என்று அதிருப்தி அதிகமாகி இப்போது அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பது பற்றி மேலிடம் ஆலோசித்திருக்கிறது.
கலாய்ப்பது கூட தெரியாமல்.. காமெடி மெசேஜ்களை உண்மையென நம்பிய கட்ஜு.. இந்திக்கு ஆதரவாக பேசி சர்ச்சை!
இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோ, பதிவுகள் அடங்கிய ஆவணங்களை வைத்து சட்டக் கருத்தறியும் (Legal opinion)பணியில் ஈடுபட்டுள்ளது காவல்துறை. இதனிடையே சர்ச்சைக்குரிய நபரின் அண்மைக்கால செயல்பாடுகள் பற்றி தேசியக் கட்சி பிரமுகர்களும் டெல்லியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இது போன்ற செயல்பாடுகள் பெரிய பின்னடைவை தரும் என்பது அவர்களின் கவலையாக உள்ளது.
இவர் மட்டுமல்ல, இன்னும் சிலராலும் கூட இந்த தேசியக் கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கடுப்பாக உள்ளனராம்.