'கேளு சென்னை கேளு' அறப்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு
Recommended Video
சென்னை: 'கேளு சென்னை கேளு' என்ற தலைப்பில் ஜூன் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிப்பதாக அறிவித்துள்ளது.
பருவ மழை பொயத்ததால் அணைகள், ஏரிகள், நீர் நிலைகள் வறண்டு போகின. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம்,பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 4 ஏரிகளும் வறண்டு போய்விட்டன.
இதனால் சென்னை மக்களுக்கு போதிய தண்ணீரை தமிழக அரசால் வழங்க முடியவில்லை.தண்ணீரை பெறுவதற்கான மாற்றுவழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது. எனினும் இப்போது உள்ள உடனடி பஞ்சத்திற்கு தீர்வாக இல்லை.
லாரிக்காக காத்திருப்பு
இதன்காரணமாக சென்னையில் மக்கள் தண்ணீர் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். போர்களில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் லாரிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சனிக்கிழமை போராட்டம்
தண்ணீர் இல்லாத இந்த சூழலுக்கு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக கூறி தமிழகம் முழுவதும் திமுகவினர் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
அதிமுக அரசு மீது புகார்
நேற்று சென்னை சேப்பாகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் பிரச்னை குறித்து போதிய அக்கறை காட்டவில்லை என்று கூறி மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்.அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு கடந்த 8 ஆண்டுகளில் ஒரு குடிநீர் திட்டத்தை கூட கொண்டுவரவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் குடம் இங்கே குடிநீர் எங்கே என்றும் முழக்கமிடடார்.
மறுத்தது சென்னை போலீஸ்
இந்நிலையில் ஊழல் எதிர்ப்பு இயக்கமான அறப்போர் இயக்கம் 'கேளு சென்னை கேளு' என்ற தலைப்பில் ஜூன் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பித்தது.
கழிவுகளை சுத்திகரிக்கணும்
ஒவ்வொரு முறை பொழியும் மழை நீர்நிலைகளிலும், நிலத்தடியிலும், சதுப்பு நிலங்களிலும் எவ்வளவு சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை அறிவிக்க வேண்டும். நீர்நிலைகளில் சுத்திகரிக்காத கழிவு நீர் மற்றும் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கழிவுநீர் அனைத்தையும் சுத்திகரித்த பிறகே நீர்நிலைகளில் கலக்க வேண்டும். நீர்நிலைகளை ஆழப்படுத்தி அதன் சேமிப்புக் கொள்ளளவை பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அறப்போர் இயக்கம் திட்டமிட்டு இருந்தது.
அறப்போருக்கு அனுமதி மறுப்பு
இந்நிலையில் அறப்போர் இயக்கத்தின் மனுவை பரிசீலித்த சென்னை போலிஸ், அதே தேதியில் வேறு அமைப்பு அனுமதி கோரிய விண்ணப்பத்து இருப்பதால் ஒரே நாளில் இரண்டு பேருக்கு அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என நிராகரித்தது. மேலும் பொது அமைதி, சட்டம் ஒழுங்கு ஆகிய காரணங்களையும் குறிப்பிட்டு நிராகரிதது
காவல்துறை விளக்கம்
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது, வழக்கமான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டியதுதானே என காவல்துறையிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஏற்கெனவே இரண்டு முறை அனுமதி வழங்கப்பட்டபோது அறப்போர் இயக்கம் நிபந்தனைகளை மீறியதாக குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.