காவலர் தேர்வு முறைகேடு வழக்கு... பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடு புகார்கள், தொடர்பாக தமிழக அரசு மார்ச் 26ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. பின், எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், வேலூரில் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் 'சிகரம்' என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
சிஏஏவுக்கு எதிரான போராட்டம்.. காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,ஒரே தேர்வு மையத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே மதிப்பெண்ணை பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதாகவும், எழுத்து தேர்வில் தோல்வியடைந்த 3 பேர் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், இது தொடர்பான முழு ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், வழக்கு தொடர்ந்தவர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.தேர்வு நடைமுறைகள் குறித்த தவறான விவரங்களை நீதிமன்றத்திற்கு அளிக்கிறார்கள். இது தொடர்பான முழு விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.