அதுமட்டும் நடக்காமல் இருந்திருந்தால்? எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்
சென்னை: சென்னை எழும்பூர் பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாதாரண விபத்து வழக்கை விசாரிக்க போன போலீசுக்கு வேறு ஒரு பெரிய வழக்கு சிக்கி இருக்கிறது. எலி வாலை பிடிக்க போய் புலி வாலை பிடித்த கதைதான் சென்னை எழும்பூரில் நடந்துள்ளது.
சென்னையில் சமீப நாட்களாக எழும்பூர், அண்ணாசாலை, ஈசிஆர் பகுதிகளில் அடிக்கடி கார்கள் அதிவேகமாக சென்று விபத்துக்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக குடி போதையில் ஓட்டி கார் விபத்து ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் நேற்று இரவு வேகமாக வந்த கார் ஒன்று எதிரில் வந்த இன்னொரு காரில் மோதி விபத்துக்கு உள்ளது.
பழனி அருகே அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்- 3 பேர் பலி; 20 பேர் படுகாயம்
கருப்பு நிற ஹை எண்ட் மாடல் கார் ஒன்று சிவப்பு நிற நேனோ காரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அந்த பகுதியில் சென்ற ஆட்டோ, பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தது.
நேனோ கார்
இந்த விபத்தில் நேனோ காரில் வந்த எழும்பூரைச் சேர்ந்த வில்சன் உள்ளிட்ட காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதற்காக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் வாகனம் விபத்துக்கு உள்ளான போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வழக்கு
இதன் காரணமாக போதையில் வாகனம் ஓட்டியதாக அண்ணாசதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இந்த விபத்து அதோடு முடிந்துவிட்டது என்று கேஸை க்ளோஸ் செய்ய செல்லும் போதுதான் போலீசார் வேறு ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். எதிரே வந்த நேனோ கார் மோசமாக சேதம் அடைந்து இருந்தது.
திருப்பம்
இந்த நேனோ காரை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று கேஸ் பதிவு செய்தனர். பின் கேஸ் எல்லாம் முடிந்துதான் காரை மீட்க முடியும். காரின் முன் பக்கம் இதில் மொத்தமாக சேதம் அடைந்த நிலையில் உள்ளே இருக்கும் பொருட்களை சோதனை செய்வதற்காக போலீசார் கார் ஒயின் கதவை திறந்து உள்ளனர். திறந்து பார்த்தால் அந்த காரில் ஒரு பை ஒன்றில் 6 யானைத் தந்தங்கள், மான்கொம்பு, கைத்தடி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி.
தந்தங்கள்
நேனோ காரில் இருந்த பொருட்களை பார்த்து போலீசார் திகைத்து போய் உள்ளனர். அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார் பொருட்களை கைப்பற்றி எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காரின் ஓனர், காயம் அடைந்த வில்சனிடம் எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். ஆப்ரிக்காவில் உள்ள தனது உறவினர்கள் அன்பளிப்பாக இதை எல்லாம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் வில்சன் கூறியுள்ளார்.
விசாரணை
ஆனாலும் யானைத் தந்தங்கள், மான்கொம்பு ஆகியவற்றை முறைகேடாக வைத்து இருப்பது, முறைகேடாக வாங்குவது சட்டப்படி குற்றம் ஆகும். இதனால் வனத்துறை அதிகாரிகள் எழும்பூர் காவல் நிலையம் வந்து இந்த பொருட்கள் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தினார்கள். அதோடு 6 யானைத் தந்தங்கள், மான்கொம்பு, கைத்தடி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றி கொண்டு சென்றனர். நேற்று அந்த விபத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்.. இந்த தந்தங்கள் போலீசாரிடம் சிக்கி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.