செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி
செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன், என் கைதை எதிர்த்து நான் நீதிமன்றம் செல்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்தார்.
சென்னை: செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன், என் கைதை எதிர்த்து நான் நீதிமன்றம் செல்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது பெரிய பிரச்சனை நிலவி வருகிறது. சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்து விட்டதாக 150க்கும் அதிகமான உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதனால் நேற்று இவர்கள் 150 பேரும் சேர்ந்து தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதையடுத்து இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட விஷால் 8 மணி நேரத்திற்கு பின் மாலை விடுவிக்கப்பட்டார். இதையடுத்து விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
செய்யாத குற்றம்
அதில், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்குப் போக தடை விதித்தது வருத்தமாக உள்ளது. உறுப்பினர் அல்லாதவர்கள் அலுவலகத்திற்குப் பூட்டு போட்டனர். உள்ளே செல்ல முயன்றதற்காக எங்களை கைது செய்துள்ளனர்.
நீதித்துறையை நம்புகிறேன்
நான் நீதித்துறையை நம்புகிறேன். காவல்துறையை புண்படுத்த நான் விரும்பவில்லை. நான் கோர்ட்டுக்குப் போனபோதெல்லாம் நீதி கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம் சிறு, நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறது.
இளையராஜா விழா
என்ன தடை வந்தாலும் இளையராஜா பாராட்டு விழா நடைபெறும். இளையாராஜா பாராட்டு விழாவில் கிடைக்கும் நிதியை வைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவுவோம். முறைகேடு நடந்திருப்பதாக கூறுகின்றனர். அதை முறைப்படி கேட்கலாம்.
ஜே.கே.ரித்தீஷ் புகார்
கேட்டால் நாங்கள் நிச்சயம் கொடுப்போம். முறை தெரியாமல் முறைகேடு புகார்களைக் கூறுகிறனர். செய்யாத தவறுக்காக என்னை கைது செய்து உள்ளே உட்கார வைத்து விட்டனர்.உறுப்பினரே இல்லாத ஜே.கே.ரித்தீஷ் புகார் கூறியுள்ளார். உறுப்பினராக இல்லாத குற்றப் பின்னணி கொண்ட கிஷோர் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
145 பிரிவு
நாங்கள் செய்யும் எல்லாமே கணக்கில் உள்ளது. நல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் நான் செய்வது முறைகேடுதான். என் மீது செக்ஷன் 145 ஏன் போட்டனர் என்று தெரியவில்லை. நல்லது நடக்கக் கூடாது என்று நினைக்கும் அனைவரும் இதன் பின்னர் உள்ளனர்.
தேர்தல் போட்டி
தேர்தலில் நிற்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நிற்க வைத்து விடுகிறார்கள். என்னயுடைய கேள்விக்கு பதில் சொன்னால் நான் நடித்துக் கொண்டு வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன். ஒவ்வொரு முறையும் இப்படியே நடந்தால் நானும் போட்டியிட்டுக் கொண்டுதான் இருப்பேன், என்று விஷால் கூறியுள்ளார்.