சிலை கடத்தலில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது.. எச்.ராஜா பரபர குற்றச்சாட்டு!
சிலை கடத்தலில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பரபர குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சென்னை: சிலை கடத்தலில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்புள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பரபர குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நாளுக்கு நாள் தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கும் இடையேயான பிரச்சனை முற்றி வருகிறது. அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது போலீசார் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகிறார்கள்.
தினமும் டிஜிபி அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் பொன்.மாணிக்கவேல் புகார் அளித்து வருகின்றனர். ஏற்கனவே பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.
இந்து அறநிலையத்துறையும் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளித்து உள்ளது. தமிழக அமைச்சர்கள் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக பேட்டியளித்து வருகின்றனர். கடைசியாக மேலும் 4 போலீஸ் அதிகாரிகள் அவர் மீது புகார் அளித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்துள்ளார். அதில், ஊழல்வாதிகள் கோவில் சொத்துக்களை திருடி இருக்கிறார்கள். மக்கள் பணத்தை, கோவிலுக்கு சொந்தமான பணத்தை ஊழல்வாதிகள் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அவர்கள்தான் தற்போது போய் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளிக்கிறார்கள். அவர்கள் அச்சத்தால் போலீசில் புகார் அளிக்கின்றனர். சிலை கடத்தலில் காவல் உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஊழல் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதற்காக நான் போராட வேண்டிய அவசியம் கூட வந்துவிடும் என்று நினைக்கிறேன், என்று கூறியுள்ளார்.