வாடகை தராததால் தாக்குதல்.. பெயிண்டர் தற்கொலை.. புழல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை: வீட்டு வாடகை தராததால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெயிண்டரை காவல் துறை ஆய்வாளர் சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. வேலையிழந்து வருமானத்தை இழந்த நிலையில் வீட்டு வாடகை கொடுக்குமாறு ஓனர்கள் தொல்லை செய்ய கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் சிலர் தாமாக முன் வந்து வாடகை தேவையில்லை என குடியிருப்பாளர்களிடம் கூறிவிடுகிறார்கள். ஆனால் புழலில் பெயிண்டர் ஒருவர் வாடகை கொடுக்காததால் அந்த வீட்டின் ஓனர், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் தூக்கிச் சென்று அடக்கம்.. தேனியில் அவலம்
தற்கொலை
அந்த புகாரின் பேரில் விசாரிக்க சென்ற ஆய்வாளர், பெயிண்டரை கடுமையாக தாக்கியதில் மனமுடைந்த பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புழல் விநாயகபுரம் பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ளவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் பெயிண்டர் சீனிவாசன் தனது குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தார்.
சீனிவாசன்
கொரோனா ஊரடங்கால் 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கூறியதற்கு தற்போதுள்ள சூழலில் தான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்கே செல்வது என சீனிவாசன் கேட்டுள்ளார்.
ஆய்வாளர்
இதையடுத்து சீனிவாசன் மீது வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணைக்கு சென்ற ஆய்வாளர் சாம்பென்சாம், சீனிவாசனை மனைவி, குழந்தைகள் முன்பு அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பணியிடை நீக்கம்
இறப்பதற்கு முன்பு சீனிவாசன், ஆய்வாளர் சாம் பென்சாம் குறித்து புகார் கூறினார். மேலும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரிடம் மரண வாக்குமூலம் வாங்கப்பட்டது. 86 சதவீத தீக்காயங்களுடன் இருந்த சீனிவாசன் இன்று மதியம் 2.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆய்வாளர் சாமை, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.