சென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை!
மனைவியை கொன்று போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: மனைவியை வெட்டி கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ஒரு போலீஸ்காரர். இந்த பரபரப்பு நிறைந்த துயர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தவர் நரேஷ். 39 வயதாகிறது. இவர் வீடு புழல் பகுதியில் உள்ளது.
ஜெயஸ்ரீ என்பவருடன் 7 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆகி வருண் என்ற மகன் உள்ளான். ஆனால் நரேஷ் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை, தகராறு வரும் என்று சொல்லப்படுகிறது.
சமாதானம்
சில நாட்களுக்கு முன்பும் இப்படி ஒரு சண்டை வந்துவிட்டதால், கோபித்து கொண்டு, ஜெயஸ்ரீ பெரம்பூரில் உள்ள தன் அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார். உடனே அங்கு சென்ற நரேஷ், ஜெயஸ்ரீயை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதவும் திறக்கவில்லை. மேலும் மகன் வருண் அழுது கொண்டே இருக்கவும், பதறி கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
புழல்
அங்கு படுகாயங்களுடன் ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். பக்கத்திலேயே நரேஷ் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதை கண்டு அலறிய மக்கள், உடனடியாக புழல் போலீசாருக்கு தகவல் தரவும் விரைந்து வந்த அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.
தகராறு
அப்போதுதான் இந்த துயர சம்பவத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஜெயஸ்ரீயை சமாதானப்படுத்தி நேற்று இரவு அழைத்துகொண்டு வீட்டுக்கு வந்த நரேஷ் மீண்டும் குடிக்க துவங்கி உள்ளார். இதனால் மறுபடியும் ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். அதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நரேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயை சரமாரியாக குத்தியதும், ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பின்னர், நரேஷ் பெட்ரூமில் மனைவியின் துப்பட்டாவில் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விசாரணை
ஒரு பக்கம் தாயின் பிணம்.. மறுபக்கம் தந்தையின் தூக்கில் தொங்கும் சடலத்தை கண்ட வருண், பயந்து அழுது கொண்டே அழவும்தான் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மனைவியை கொன்றுவிட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.