மகாபலிபுரம் வரும் சீன அதிபர்.. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் லாட்ஜுகளில் போலீஸ் ரெய்டு
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங், மாமல்லபுரம் வருகை தருவதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் உளவுத் துறையினர் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி மாமல்லபுரம் வருகை தருகிறார். 13ஆம் தேதி வரை அங்கே தங்கியிருக்கும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தி, பல்வேறு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
சீன அதிபர் வருகை தரும் போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு திபெத்தியர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள விடுதியில் போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தியபோது, மாணவ மாணவிகளுடன் சேர்ந்து திபத்திய போராட்டக் குழுவினரும் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உட்பட, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் உளவுத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இன்று காலை முதல் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு தங்கியுள்ள திபெத்தியர்களிடம், தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகை தந்துள்ளவர்கள் யாராவது இருப்பின் அவர்கள், கைது செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தை சீனா ஆக்கிரமித்து அதன் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளது. சீனாவின் அடக்குமுறை காரணமாக திபெத் மக்கள் பலரும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி உள்ளனர்.
தமிழகத்தில், கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மாவட்டங்களில் இவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும், குறிப்பிட்ட பகுதிகளில் திபெத்தியர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் உரிமைகளை நசுக்கிய சீனாவுக்கு எதிராக அவர்கள் அவ்வப்போது உலகமெங்கும் எதிர்ப்புகளை பதிவு செய்கின்றனர். இப்போது சீன அதிபருக்கு எதிராக போராடுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், முன்கூட்டியே அதை ஒடுக்கும் முயற்சியில் காவல்துறை களமிறங்கியுள்ளது.