ஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்!
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய தவறான கருத்துக்கு எதிராக இன்று அவர் வீட்டின் முன் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய தவறான கருத்துக்கு எதிராக இன்று அவர் வீட்டின் முன் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் ரஜினிகாந்த் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள், பல்வேறு பாஜகவினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசினார். அதில், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.
என்ன போராட்டம்
பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். வரலாற்று ரீதியாக தவறாக சில தகவல்களை ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது. மொத்த 3 போலீஸ் நிலையங்களில் ரஜினி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி எப்படி
அதேபோல் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டங்கள் போடப்பட்டுள்ளது. ரஜினி வீடு முற்றுகைப் போராடம் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக நாளை நடப்பதாக இருந்தது. ஆனால் இன்று காலையிலேயே இந்த போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். ரஜினிக்கு எதிராக பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை போராட்டம்
அதேபோல் நாளை திராவிடர் விடுதலை கழகம் ரஜினி வீடு முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். அதனால் இன்றும் நாளையும் ரஜினி வீடு முன் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கலாம் என்று கூறப்பட்டுகிறது. இதனால் ரஜினி சார்பாக போலீசில் பாதுகாப்பு கோரப்பட்டது.
ரஜினி கோரிக்கை
இதையடுத்து தற்போது சென்னை போலீஸ் சார்பாக ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு முன் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். ஷூட்டிங் இப்போது இல்லாத காரணத்தால் ரஜினி வீட்டில்தான் இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.