ஓய்வின்றி.. வியர்த்து.. கண்கள் செருகி.. உடல் சோர்ந்த நிலையிலும்.. காஞ்சி போலீஸின் அதிரடி வீடியோ!
அத்திவரதர் பாதுகாப்பு பணி குறித்து போலீசார் வீடியோ வெளியிட்டுள்ளனர்
Recommended Video
சென்னை: ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக் கொண்டிருக்கின்றன பல காக்கி சட்டை கால்கள்.. முகமெல்லாம் வியத்து, கண்கள் செருகி.. உடல் சோர்ந்த நிலையிலும் போலீசாரின் அத்தி வரதரின் பாதுகாப்பு பணி பிசிறின்றி நடக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மண்ணா நிக்கறீங்களே என்று காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா கடுமையான முறையில் பேசியதற்குப் பதிலடியாக போலீஸார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் தாங்கள் அத்தி வரதர் தரிசனத்தின்போது எப்படியெல்லாம் பக்தர்களின் பாதுகாப்பாக விழிப்புடன் பணியாற்றுகிறோம் என்பதை தெள்ள தெளிவாக விளக்கி உள்ளனர்.
வருத்தம்
4 நாளைக்கு முன்பு, இன்ஸ்பெக்டர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தகாத வார்த்தைகளாலும், ஒருமையிலும் திட்டியிருந்தார். இது வீடியோவாக வெளிவந்து, பொதுமக்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கலெக்டர் பொன்னையாவும் தான் பேசியதற்கு வருத்தம் சொல்லி இருந்தார். ஆனாலும் போலீசாருக்கு மனசே ஆறவில்லை.
போலீஸ்
அத்திவரதர் தரிசனத்துக்கு முன்பிருந்தே பாதுகாப்பு பணிக்காக வந்து குவிந்து விட்டனர். ஒருநாளைக்கு எப்படியும் இரண்டரை லட்சத்துக்கு மேல பக்தர்கள் இங்கு வந்து போகிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசரில் தங்கள் பணியை ஒவ்வொருவரும் செய்து வரும்நிலையில், ஒட்டுமொத்த போலீசையும் கலெக்டர் திட்டி இருந்தது காவல்துறைக்கு மறக்க முடியாமல் உள்ளது.
பாதுகாப்பு
அதனால்தான் தாங்கள் அத்திவரதர் தரிசனத்தின்போது செய்த பணிகளை, அனுபவித்த இன்னல்களை, வீடியோவாக வெளியிட்டு கலெக்டருக்கு பதிலடி தந்துள்ளனர். அந்த வீடியோவில், ஆண், பெண் போலீசார்கள் இங்குமங்கும் ஓடுவதும், தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதும் என பரபரப்பாக இருக்கின்றனர்.
ஷிப்ட் முறை
2 காவல்துறை தலைவர்கள், 2 காவல்துறை துணை தலைவர்கள், 8 காவல்கண்காளிப்பாளர்கள், 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 62 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 186 காவல் ஆய்வாளர்கள், 408 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 542 போலீசார் இந்த அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணியில் ஷிப்ட் முறையில் ஈடுபடுவது தெளிவாக காட்டப்படுகிறது.
கரிசனம்
முண்டியடிக்கும் அந்த கூட்டத்திலும், குழந்தைகளிடம் கனிவை காட்டி வரிசையில் வர சொல்லுகிறார்கள். ஊனமுற்ற நபர்களுக்கு முன்னுரிமை தந்து உடன் அழைத்து சென்று உதவுகிறார்கள். அது மட்டுமில்லை.. எத்தனையோ வயதானவர்கள், நோயாளிகள் கூட்டத்தில் சுருண்டு,மயங்கி விழுந்துவிட்டால், அவர்களை அலேக்காக தூக்கி கொண்டு மருத்துவ முகாமுக்கு ஓடுகிறார்கள் போலீசார்.. . உடல் சோர்ந்த நிலையிலும் பாதுகாப்பு பணியினை பிசிறின்றி செய்து வரும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.