ஸ்டாலின் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. அமைச்சர் பாண்டியராஜன் வீட்டில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
Recommended Video
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீட்டில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் மிசா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் கூறிய பாண்டியராஜன், ஸ்டாலின் கைது செய்யப்பட வேறு காரணம் இருந்தது என்று சில ஆசேபிக்கத்தக்க காரணங்களை தெரிவித்தார்.
அமைச்சர் பாண்டியராஜன் இந்த பேட்டியால், திமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மாநிலம் முழுக்க ஆங்காங்கே அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக, திமுகவினர் போராட்டம் நடத்தினர். ட்விட்டரிலும் பாண்டியராஜனுக்கு எதிராக ஹேஷ்டேக் டிரெண்டு செய்தனர்.
முன்னாள் அமைச்சரான திமுகவின் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், மாஃபா பாண்டியராஜன் பல கட்சி தாவியவர் என்று அடுக்கடுக்காக விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் திமுகவினர் போராட்டம் நடத்தக் கூடும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. இதையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள பாண்டியராஜனின் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாஃபா பாண்டியராஜன், வீட்டு முன் போராட்டம் நடத்த திமுகவினர் வரக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 25 போலீசார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.