வேலை வாங்கி தருவதாக முறைகேடு.. செந்தில் பாலாஜி வீடுகளில் அதிரடி ரெய்டு.. சொத்து ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: முன்னாள் அமைச்சரும், திமுகவின் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியின்போது, 2011-15ம் ஆண்டுகளில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. பிறகு கட்சி மாறி திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாகியுள்ளார்.
அவர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் 38 பேரிடம் பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக காவல் துறையில் பல புகார்கள் பதிவாகின.
இதையடுத்து சென்னையில் 9 இடங்கள், கரூரில் 5, திருவண்ணாமலையில் 2 இடங்கள், கும்பகோணத்தில் ஒரு இடம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 17 இடங்களில், போலீசார் இன்று சோதனை நடத்தினர். இதையடுத்து அவரது வீடுகள் சீல் வைக்கப்பட்டன.
இனி யாராவது ஹார்ன் அடிப்பீங்க.. மும்பை போலீஸ் செய்த வேலையை பாருங்க.. செம ஐடியா!
நடைபெற்ற சோதனை தொடர்பாக காவல்துறையை இன்று இரவு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் செந்தில் பாலாஜியின் வீடுகளிலிருந்து சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, நகைகள், லேப்டாப்புகள், வங்கி காசோலைகள், வங்கி கணக்கு புத்தகங்கள், வாங்கி இருப்பு பெட்டகங்களின் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பெற்ற சுய விவரக் குறிப்புகள் (பயோ) அடங்கிய காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ரெய்டுகள் நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.