வரதட்சணை வாங்கக்கூடாது. தமிழக போலீசாருக்கு டிஜிபி திரிபாதி முக்கிய சுற்றறிக்கை
சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வரதட்சணை, பரிசுப்பொருட்கள் வாங்கக் கூடாது என அனைத்துக் காவல்துறையினருக்கும், தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மீதான தனிப்பட்ட வரதட்சணை பிரச்சனை மீதான புகாருக்காக இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் போது, " எந்த பொது ஊழியராக இருப்பினும் குற்றவியல் வழக்கில் விதிவிலக்கு அளிக்க முடியாது. அரசு ஊழியர்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களிலும், வெளியிடங்களிலும் அவர்களின் நடத்தை கண்ணியமானதாக இருக்க வேண்டும். பொது மக்களுக்கு மத்தியில் நன்னடத்தையை பின்பற்ற வேண்டும். காவல்துறையில் பரிசுப்பொருட்கள் எனும் பெயரில் பூங்கொத்துக்களை பரிமாறிக்கொள்வது அதிக அளவில் நடைபெறுகிறது. இதனை ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறுவது போன்றவை காவல்துறை நடத்தை விதி 4-க்கு எதிரானது. இது தடுக்கப்பட வேண்டும். எனவே சீருடை பணிக்கான ஒழுக்கத்தையும், மதிப்பையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பணியாற்றுபவர்கள் பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறுவதை தடுக்கவும், காவல்துறை நடத்தை விதிகளை கடுமையாக பின்பற்றுவது தொடர்பாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. 6 வாரத்திற்குள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்". என உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி இன்று சுற்றறிக்கை ஒன்றினை காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் பரிசுப்பொருட்கள், வரதட்சணை வாங்கக் கூடாது என்றும், காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்துகள் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.