தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை.. சிறப்பு எஸ்ஐயின் விபரீத முடிவு.. மன உளைச்சலால் பரிதாபம்
கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார் சப் இன்ஸ்பெக்டர்
சென்னை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கத்தியால் தன் கழுத்தை தானே அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையை உலுக்கி உள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சேகர். வயது 48. இவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, தனியார் பள்ளியில் வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
நேற்று மாலை பணி முடிந்து தமிழ்ச்செல்வி வீட்டுக்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
தற்கொலை
அப்போது வீட்டின் படுக்கை அறையில், சேகர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அலறி துடித்தார். சேகருக்கு பக்கத்தில் ஒரு கத்தி இருந்தது. அந்த கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மதுபோதை
இந்த சம்பவம் குறித்து உடனடியாக வடபழனி போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் சேகர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சிக்காக வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்துக்கு சேகர் சில தினங்களுக்கு முன்பு சென்று வந்திருக்கிறார். ஆனால் குடும்பத்தில் நிறைய பிரச்சனை ஏற்பட்டதால் அந்த பயிற்சிக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். லீவு எடுத்து கொண்டு வேலைக்கும் போகாமல் தண்ணி அடித்து வந்துள்ளார்.
மன உளைச்சல்
நேற்றுகூட போதையில் இருந்தபோதுதான் அதிகமான மன உளைச்சல் ஏற்பட்டு கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் தற்கொலை செய்த சேகருக்கு பணிச்சுமை காரணமாக இருந்ததா? அல்லது உயரதிகாரிகளின் கெடுபிடி காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பதவி உயர்வு
இறந்து போன சேகருக்கு 4 மாசத்துக்கு முன்னாடிதான் பணி உயர்வு கிடைத்துள்ளது. இதற்காகத்தான் அந்த பயிற்சிக்கே அவர் சென்று வந்திருக்கிறார். 2 நாள் மட்டுமே சென்றுவந்த நிலையில் 5 நாளாக வீட்டில்தான் இருந்துள்ளார். மனைவியும், மகனும் வெளியில் சென்ற நேரமாக பார்த்து கழுத்தை அறுத்து கொண்டது பெரிய குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சேகரின் மனைவி, மகனிடம் விசாரணை நடந்து வருகிறது.