ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக... போலீஸ் ஸ்டேசனை வகுப்பறையாக மாற்றிய இன்ஸ்பெக்டர்!
ஏழைக்குழந்ந்தைகளுக்காக காவல் நிலையத்தை பள்ளி வகுப்பறையாக மாற்றியுள்ளார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.
சென்னை: டெல்லியில் காவல் நிலையம் ஒன்று ஏழைக் குழந்தைகளின் பள்ளி வகுப்பறையாக மாறியிருப்பது நெகிழ வைத்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் 20 வயதேயான சந்தீப் போஹத். இவர் அப்பகுதி குப்பத்தைச் சேர்ந்த ஏழை குழந்தைகளுக்கு அருகில் இருந்த பூங்கா ஒன்றில் வைத்து இலவசக் கல்வி அளித்து வந்தார். ஆனால் அது மாணவர்களுக்கு வசதியாக இல்லை.
இந்த விசயத்தில் போஹத்துக்கு உதவ நினைத்தார் ரோகிணி காவல் நிலைய ஆய்வாளர் ஜக்மிந்தர் சிங். என்ன செய்வது என யோசித்த அவர், இறுதியில் தனது காவல் நிலையத்தையே மாணவர்களுக்கு வகுப்பறையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்.
பாதுகாப்பான இடம்:
இதையடுத்து ஏராளமான மாணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்போது காவல் நிலையத்தில் வைத்து கல்வி கற்று வருகின்றனர். பூங்கா காதுகாப்பாக இருக்காது என்பதால் பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முதலில் தயங்கினார். ஆனால் காவல் நிலையம் பாதுகாப்பான இடம் என்பதால், தற்போது நிறைய பெண் குழந்தைகள் கல்வி கற்க ஆரம்பித்துள்ளனர்.
ஜக்மிந்தர் சிங்கிற்கு பாராட்டு:
அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு தேவைப்படும் பொருட்களையும் வழங்கி இருக்கிறார் காவல் ஆய்வாளர் ஜக்மிந்தர் சிங். இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வறுமையில் கல்வி:
சந்தீப் போஹத்தின் பெற்றோர்கள் துப்பரவு பணியாளர்களாக பணி புரிந்து வந்தனர். வறுமையின் காரணமாக அவர் கல்வி கற்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். கஷ்டப்பட்டு அரசு பள்ளியில் படித்த சந்தீப், திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றிருக்கிறார்.
மகிழ்ச்சி:
எனவே தான் தன்னை போன்ற ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்லி கற்பித்து வருகிறார் சந்தீப். இவர் முதலில் இதை தொடங்கிய போது, இந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும் என நினைக்கவில்லையாம். தற்போது அவருக்கு நிறைய ஆதரவு கிடைத்திருப்பதால், மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தீப்.
கழிவறைக் கட்டி உதவி:
கல்வி கற்றுக்கொடுப்பதற்காக மாணவர்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்குவதில்லை அவர். இலவசமாகவே பாடம் கற்றுக்கொடுக்கிறார். இருப்பினும் சில பெற்றோர் தாங்களாகவே முன்வந்து தங்களால் முடிந்த தொகையை சந்தீப்புக்கு தருகின்றனர். இதை வைத்து அந்த குப்பத்தில் இரண்டு கழிவறைகளை கட்டியிருக்கிறார் அவர்.