பல லட்சங்கள் கைமாறிய நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வசமாக சிக்கும் அதிகாரிகள்?
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர உதித் சூர்யாவுக்காக பல லட்சம் ரூபாய் கைமாறியதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(19).
இவர் 2019-2020-ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி அதற்கான மதிப்பெண் பட்டியலுடன் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அதாவது கல்லூரியில் படிப்பவர் ஒருவர், தேர்வு எழுதியவர் வேறொருவர் என புகார் எழுந்தது.
விசாரணை
இதையடுத்து நீட் நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்தையும் படிப்பில் சேர்ந்துள்ள மாணவரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்த தேனி அரசு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மாணவர் உதித் சூர்யா மீது போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து அவரது தந்தை, தாயிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
போலீஸார் தேடுதல் வேட்டை
இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானதை அடுத்து உதித் சூர்யா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரை பிடிக்க போலீஸார் 10 தனிப்படையினரை அமைத்துள்ளனர். அவருடைய உறவினர்கள் வீடு, அவருடைய தந்தையின் நண்பர்கள் வீடுகளில் போலீஸார் சோதனை செய்தனர்.
புகார்
இந்த ஆள்மாறாட்ட சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக இந்த ஆள்மாறாட்ட புகாரை அசோக் கிருஷ்ணன் என்பவர்தான் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஈமெயில் மூலம் புகார் அளித்தது தெரியவந்தது.
5 மாணவர்களும் ஆள்மாறாட்டம்
இந்த அசோக் கிருஷ்ணன் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இவருக்கு எப்படி ஆள்மாறாட்டம் விவகாரம் தெரியும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை தனது விடுதி அறையில் இருந்த மாணவர்களிடம் உதித் சூர்யா கூறியதாக தெரிகிறது. அது போல் அவருடன் இருந்த 5 மாணவர்களும் ஆள்மாறாட்டம் செய்தே தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
தேர்ச்சி
இதுகுறித்து போலீஸாரும் மருத்துவத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உதித் சூர்யா மும்பையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சேர்ந்து நீட் தேர்வு எழுதியுள்ளதும் அவருடன் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஏன் கண்டுபிடிக்கவில்லை
ஆள்மாறாட்டம் செய்ய பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்தனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதப்பட்ட விவகாரத்தில் பல லட்சம் ரூபாய் கைமாறியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது நீட் நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்துக்கும் நேரில் வந்துள்ளவருக்கு வித்தியாசத்தை அங்கிருந்த அதிகாரிகள் கண்டுபிடிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உண்மைகள்
ஒரு வேளை உதித் சூர்யா வராமல் இருந்திருந்தாலும் சான்றிதழ்களையும் அடையாள சான்றிதழ்களையும் சரி பார்க்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. எனவே இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் தந்தை வெங்கடேசனையும் உதித் சூர்யாவையும் கண்டுபிடித்தால் மட்டுமே பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என தெரிகிறது.